தமிழகத்தில் 547 ஆம்னி பஸ்களுக்கு சிக்கல்.. நாளை முதல் இயங்காது! அதிரடி காட்டிய போக்குவரத்து துறை
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் வெளி மாநில பதிவெண்ணுடன் இயங்கி வரும் 547 பேருந்துகள் இயங்காது என்றும் தடையை மீறி இயங்கும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு சிறிய நகரங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் கூட இயக்கப்பட்டு வருகின்ற்ன.

ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் பலரும் ஆம்னி பஸ்களை நாடி செல்வதை பார்க்க முடிகிறது. சிறிய குக்கிராமங்கள் வழியாக ஆம்னி பஸ்கள் செல்வதால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பலரும் இந்த ஆம்னி பஸ்களையே அதிகம் நாடி செல்கிறார்கள். பண்டிகை நாட்கள், வார இறுதிநாட்களில் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்படுவதாக பயணிகள் இந்த ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
இது ஒருபக்கமென்றால் ஆம்னி பஸ்கள் பலவும் வெளி மாநில பதிவெண்களுடன் இயங்குவதை பார்த்து இருக்க முடியும். உதாரணத்திற்கு பாண்டிச்சேரி, நாகலாந்து (NL) உள்ளிட்ட பதிவெண்களுடன் அதிக அளவிலான ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இப்படி வெளிமாநில பதிவெண் கொண்ட 652 ஆம்னி பேருந்துகளால் ஆண்டொன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது.
இதற்கான அவகாசத்தை ஆம்னி பேருந்து சங்கத்தினர் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியதால், அவ்வப்போது அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது. ஆனால், வரும் 14 ஆம் தேதி முதல் தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பஸ்கள் மாநிலத்தில் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை அறிவித்தது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், "வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து, போக்குவரத்துத் துறை ஆணையர் முடிவு செய்வார்.
சுற்றுலாப் பயணிகளோட எத்தனை வருட கனவு? ஊட்டிக்கு விழுந்த குட் நியூஸ்.. சீக்கிரமே ரூட் மாறப்போகுது
ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மத்திய அரசின் அறிவிப்பின்படி 15 ஆண்டுகள் கடந்த பேருந்துகள் காலாவதியான பேருந்துகளாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கால அவகாசம் கோரி இருக்கும் நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் அதனை பரிசீலனை செய்வார் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, கால நீட்டிப்பு கோரிய ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க போக்குவரத்து துறை ஆணையர் மறுத்துள்ளார். இதனால், தமிழகத்தில் நாளை முதல் வெளி மாநில பதிவெண்ணுடன் இயங்கி வரும் 547 பேருந்துகள் இயங்காது என்றும் தடையை மீறி இயங்கும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications