ஆளுநராகிறார் தமிழகத்தின் மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் குமரி காந்தி அண்ணாச்சி?
Recommended Video
சென்னை: தமிழகத்தின் முதுபெரும் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களில் ஒருவரும் தற்போதைய பாஜக மாநில துணை தலைவருமான குமரி ஆர். காந்தி விரைவில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்கின்றன பாஜக தகவல்கள்.
கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை விட தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருவர் குமரி ஆர். காந்தி. இவர் திருமணமாகாதவர்.

2011 சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். நீண்டகாலமாக பொன். ராதாகிருஷ்ணன் அணியினரால் ஓரம்கட்டப்பட்டுள்ளார் என்கிற குற்றச்சாட்டு அவ்வப்போது முன்வைக்கப்படும்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆர். காந்தியின் கோஷ்டி குறித்து ஊடகங்கள் எழுதுவதும் அவர்களை பாஜக தரப்பு சமாதானப்படுத்துவதும் ஒரு நிகழ்வாக நீடிக்கிறது. இந்த நிலையில் அண்மையில் ஆர் காந்தி தமது 75-வது பிறந்த நாள் விழாவை அண்மையில் கொண்டாடினார்.
அப்போது கன்னியாகுமரி வந்திருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆர். காந்தியை நேரில் சந்தித்து அரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து 'காந்தி அண்ணாச்சி' ஆளுநராகப் போகிறார் என்கிற தகவல் குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகளிடையே தீயாக பரவி வருகிறது.
ஆர். காந்திக்கு ஆர்.எஸ்.எஸ். வாய்ப்பு கொடுக்க முன்வந்திருப்பதன் மூலம் பொன். ராதாகிருஷ்ணனின் எதிர்கால அரசியல் அத்தியாயம் என்ன என்பதும் கேள்விக்குறியாகிறது. ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த சண்முகநாதன் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். பாலியல் புகார்கள் எழுந்ததால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications