"உலகளவில் டிரெண்ட் செய்வோம் வா உடன்பிறப்பே!" - அடேங்கப்பா.. வேற லெவலில் பிளான் போடும் தி.மு.கவினர்!
சென்னை: 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைகிறது.
ஓராண்டினை நிறைவு செய்யும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு, கூட்டணி கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டாலின் அரசின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ட்விட்டரில் ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஓராண்டு நிறைவு
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. 2021 மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதனையொட்டி நாளை ஸ்டாலின் அரசின் ஓராண்டு நிறைவை தி.மு.கவினர் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
சாதனை விளக்கக் கூட்டங்கள், நலத் திட்ட உதவிகள் என தமிழகம் முழுவதும் நாளைய தினத்தைக் கொண்டாட உடன்பிறப்புகள் உற்சாகமாகத் தயாராகி வருகின்றனர்.

ஓராண்டு கால சாதனைகள்
தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்பார்கள். ஸ்டாலினின் வெற்றிக்கு காரணமானவற்றில் முக்கியமானதாக பார்க்கப்படுவது தி.மு.கவின் தேர்தல் அறிக்கைதான். எனவே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முதன்மை இலக்கு என முதல்வராக பொறுப்பேற்றபோதே தெளிவாகக் கூறினார் ஸ்டாலின்.
கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு, மக்களைத்தேடி மருத்துவம் என பல திட்டங்கள் இந்த ஓராண்டு கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டாலும், அதில் சர்ச்சைகள் ஏற்பட்டன.

உடன்பிறப்புகள் உற்சாகம்
தி.மு.க அரசின் ஓராண்டு நிறைவை சமூக வலைதளங்களில் சிறப்பாக கொண்டாட தி.மு.க ஐ.டி விங் மட்டுமல்லாது, தி.மு.க ஆதரவாளர்களாக செயல்படுவோரும் திட்டமிட்டு வருகின்றனர்.
தி.மு.க அரசின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் பரப்பி, ஸ்டாலின் ஆட்சியின் பெருமைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் குழுக்களில் தி.மு.க நிர்வாகிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ட்ரெண்ட் செய்வோம் வா உடன்பிறப்பே
ஸ்டாலின் அரசின் ஓராண்டு நிறைவையொட்டி #1YearOfCMStalin எனும் ஹேஷ்டேக்கை உலகளவில் டிரெண்ட் செய்து கவனத்தைப் பெற வேண்டும் என உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாம். அதுவும் ஒரே சமயத்தில் அதிகமானோர் பதிவுகளை இட வேண்டும் என்பதற்காக காலை 10 மணி முதல் அதிகளவில் இந்த ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்காக 'உலகளவில் டிரெண்ட் செய்வோம் வா உடன்பிறப்பே'எனக் குறிப்பிட்டு, ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புகளோடு தி.மு.க வாட்ஸ்-அப் குழுக்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications