சென்னை கோயம்பேட்டில் பார்த்தாலே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் விலை.. கேட்டால் ஆடிப்போயிடுவீங்க
சென்னை: பொதுவாகவே மழைக்காலத்தில் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்படும். அந்த வகையில் வெங்காய விளைச்சல் கடந்த சில மாதங்களில் தொடர்ந்து குறைந்துள்ளது. இது ஒருபுறம் எனில் வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம் போன்ற காரணங்களால் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள மொத்த விலை காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை எட்டியுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சின்ன வெங்காயம் தான் பயிரிடப்படுகிறது. பெரிய வெங்காயம் பெரிய அளவில் பயிரிடப்படாது. பெரிய வெங்காயம் என்பது மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா , மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. வெங்காயத்திற்கான மொத்த சந்தை என்பது மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ளது.

அங்கிருந்து தான் பல்வேறு மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்படும். தற்போது அங்கேயே வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரத்து குறைவு ஒருபுறம், மறுபுறம் வெங்காய ஏற்றுமதிக்கு தடையை மத்திய அரசு நீக்கியது போன்ற காரணங்களால் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக தினசரி கோயம்பேட்டிற்கு வரும் வெங்காயத்தின அளவு குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு கோயம்பேடு சந்தைக்கு 1300 டன் வெங்காய வரத்து இருக்குமாம். ஆனால் நாசிக்கில் இருந்து தற்போது தினமும் 450 டன் மட்டுமே வெங்காயம் வருகிறது என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.
இதன் காரணமாக கோயம்பேட்டில் மொத்த வர்த்தகத்தில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. சில்லறை காய்கறி கடைகளில் ஒரு கிலோ 120 முதல் 130 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது உச்சம் தொட்டுள்ள வெங்காயத்தின் விலையானது இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இப்படியே நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறினார்கள்.
வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீர் வருகிறது மக்களுக்கு.. வெங்காயம் தான் சமையலில் முக்கியமான பொருள் என்பதால், விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது ஒருபுறம் எனில், வெங்காயத்தை பதுக்குவதும் அதிகரித்து வருகிறது. பதுக்கலை தடுப்பதுடன், வெங்காயத்தை குறைந்த விலையில் பசுமை பண்ணை அங்காடிகள் மற்றும் ரேஷன் கடைகளில் விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக தக்காளி விலை கடந்த மாதம் கடுமையாக உயர்ந்து காணப்பபட்டது அது படிப்படியாக குறைந்தது. தற்போது தக்காளி விலை ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய் என்கிற அளவில் விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications