கொரோனா வந்தாலும் படிப்போம்ல.. சூப்பர் டீச்சர்கள்.. கலக்கும் மாணவர்கள்.. ஆன்லைனில் தொடரும் படிப்பு!
சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் மூலம் பாடம் கற்பித்து வருகிறார்கள். சென்னையில் உள்ள பள்ளிகளில் மைக்ரோசாப்ட் செயலியை கொண்டு பாடம் எடுத்து வருகிறார்கள்.
கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் போடப்பட்டது என்றாலும் கூட மார்ச் 16 தேதி முதலே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு கூட நடைபெறவில்லை. ஒரு சில மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முன்கூட்டியே தொடங்கிய நிலையில் ஓரிரு தேர்வுகளை அவர்கள் எழுத முடியாமல் போனது.
இதையடுத்து சிபிஎஸ்இ பாடப்பிரிவுகளுக்கு வழக்கம் போல் ஏப்ரல் மாதம் பள்ளி வகுப்புகள் தொடங்கப்படும். ஆனால் கொரோனா காரணமாக அதுவும் தொடங்கப்படவில்லை. மேலும் தற்போது கொரோனா பாதிப்பை பார்த்தால் பள்ளித் திறப்புகள் இன்னும் ஒத்தி போகும் நிலை உள்ளது.
அச்சுறுத்தல்
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை சேத்துபட்டில் உள்ள பிரபல தனியார் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் முதலில் ஜும் ஆப் கொண்டு ஏப்ரல் மாதம் மத்தியில் பாடம் கற்பிக்கப்பட்டது. இந்த செயலி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என மத்திய அரசு அறிவித்தது.
ஏக்கம்
இதையடுத்து சிறிது நாட்கள் பள்ளி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. அந்த செயலியை டெலிட் செய்துவிடுமாறு பள்ளி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் மைக்ரோசாப்ட் ஆப் மூலம் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் அனைத்து பாடங்களும் யோகா உள்பட பயிற்றுவிக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்களான நடனம், பாட்டு, வாய்ப்பாட்டு, பியானோ, கீ போர்டு, ஸ்கேட்டிங், செஸ் உள்ளிட்டவைகளுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளன. இவை விடுமுறையை ஜாலியாக கழிக்க முடியாத மாணவர்களின் ஏக்கத்தை போக்கும்விதமாக இருக்கும்.
ஆசிரியர்கள்
அது போல் தினமும் அசைன்மென்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. கிளாஸ்ரூம் என்கிற ஆப் மூலம் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றுக்கான வீட்டுப் பாடங்கள் அனுப்பப்படுகின்றன. மாணவர்கள் அதை முடித்துவிட்டு மீண்டும் அதே ஆப்பில் அனுப்ப வேண்டும். அதை ஆசிரியர்கள் பார்க்கிறார்கள். எங்கு தவறுகள் உள்ளனவோ அவற்றை சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆன்லைன்
மே மாதம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது. இது போல் ஆன்லைன் மூலம் பாடம் எடுப்பதால் பள்ளித் திறப்பின்போது அவர்கள் மீதான சுமை குறைக்கப்படும்.
ஆன்லைன்
கொரோனா ஊரடங்கில் டி.வி. பார்ப்பது மற்றும் சின்ன, சின்ன சேட்டைகளை செய்து பெற்றோருக்கு இடைஞ்சலையும் உருவாக்கி வந்தனர். இந்த நிலையில் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் படிப்பில் மூழ்கியுள்ளனர். சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இது போல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மாணவர்கள்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் வாட்ஸ்அப் வழியாக பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பவர்கள் என்பதால் ஒரு சில மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப் மொபைல் உள்ளது.
நல்ல மாற்றம்
அந்த ஒரு சில மாணவர்களின் வாட்ஸப்பை பயன்படுத்தி வகுப்பு வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. வாட்ஸ் அப் மொபைல் இல்லாத மாணவர்களுக்கு தினசரி மொபைல் வழியாக பெற்றோர்களிடம் பேசி குறிப்பிட்ட பாடப் பகுதியை படிக்கச் சொல்லி அதனை பெற்றோர்களை கண்காணிக்குமாறு ஆசிரியர்களால் தினமும் அறிவுறுத்தப்படுகிறது. இது மாணவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களுக்கு பாடம்
ஆசிரியர்களும் மொபைல் வழியாக பாடம் நடத்துவதை ஆர்வத்துடன் செய்து வருவதாக பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார். ஆசிரியர்களும் தங்கள் ஊரடங்கை வீணடிக்காமல் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது பெரும் பாராட்டுக்குரியதாகும். அதிலும் பெண் ஆசிரியைகள் வீட்டையும் பார்த்துக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருவதற்கு ஒரு சபாஷ்.