செஸ் ஒலிம்பியாட்.. பிரம்மாண்டமாக முடிந்த தொடக்க விழா.. எப்படி சாதித்தார் விக்னேஷ் சிவன்?
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரம்மாண்டமாக திட்டமிட்டது பற்றி இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதல் சுற்று போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடக்க விழா
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பட்டு சட்டை, வேட்டியுடன் கலந்துகொண்டனர். அதேபோல் தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். அதேபோல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டனர்.
Recommended Video

கலை நிகழ்ச்சிகள்
இந்த தொடக்க விழாவில் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. பின்னர் கமல்ஹாசன் குரலில் உருவாக்கப்பட்ட தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பெருமை, கல்லணை, கோயில்கள், கவிஞர்கள், சங்க இலக்கியம், சோழர்கள் என முப்பரிமானத்தில் நிகழ்த்துக்கலை அனைவரையும் பிரமிக்க வைத்தது. அதேபோல் லிடியனின் இசை நிகழ்ச்சிகளும் அனைவரையும் வியக்க வைத்தது.

யார் இயக்குநர்?
குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு இப்படி ஒரு தொடக்க விழாவா என்று அனைவரும் பிரமிக்க வைக்கும் வகையில் நிகழ்ச்சிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்தது. இந்த தொடக்க நிகழ்ச்சிக்கு பின் இருப்பவர் யார் என்று தேடும் போது, அரங்கத்தில் வாக்கி டாக்கியுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர வீடியோ பாடலை இயக்கி இருந்த அவர், தொடக்க விழாவையும் இயக்கி இருந்தார்.

விக்னேஷ் சிவன் பேச்சு
பிரம்மாண்டமான தொடக்க விழா குறித்து விக்னேஷ் சிவன் கூறுகையில், குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தொடக்க விழா இது. எங்களுக்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசு அதிகாரிகள் முழுமையாக செய்து கொடுத்தனர். சர்வதேச அளவில் பார்க்கப்படும் விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளும் சர்வதேச தரத்துடன் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம். எங்கள் அணிக்கும் சரியான ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. 10 நாட்களில் இதற்காக திட்டமிட்டு செய்து முடித்தோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications