ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O: குட்கா விற்றால் குண்டர் சட்டம்.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு
தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா 2.O நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா 2.O நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம் பாயும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் சைலேந்திரபாபு.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பெருகிவரும் கஞ்சா, குட்கா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை தடுப்பதற்கு தமிழக போலீசார் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
போதைபொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி ஆபரேஷனை நடத்த உத்தரவிட்டார்.
அதற்கு "ஆபரேஷன் கஞ்சா வேட்டை" என்று பெயரிடப்பட்டது. இதன்பேரில் தமிழகம் முழுவதும் போலீசார் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை
ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் கடத்திய மற்றும் போதைபொருட்கள் விற்பனை செய்து வந்த 6623 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து ரூ.23 கோடி மதிப்புள்ள ஹெராயின், ரூ.4.20 கோடி மதிப்பில் குட்கா, ரூ1.80 கோடி மதிப்பில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.23 கோடி மதிப்பில் 23 கிலோ அளவில் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் ஹெராயினை பதிக்கிவைத்திருந்த 7 குற்றவாளிகளையும் கைது செய்தனர். கஞ்சா விற்பனை செய்ததற்காக 816 வழக்குகள் பதியப்பட்டு 871 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ1.80 கோடி மதிப்புள்ள 1774 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 25 நான்கு சக்கர வாகனங்கள், 129 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 154 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கஞ்சா பறிமுதல்
அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 82 கிலோ, காஞ்சிபுரத்தில் 21 கிலோ கஞ்சா, மதுரையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்து வந்த தலைமறைவு கஞ்சா மொத்த வியாபாரிகளான பெரியசாமி மற்றும் சீனிவாசன் என்பவர்களை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வைத்து நாமக்கல் போலிசார் கைது செய்தனர். இவர்களை கைது செய்ததன் மூலம் கஞ்சா விற்பனை மொத்த வியாபாரம் பெருமளவில் முடக்கப்பட்டது.

குட்கா விற்பனை
அதேபோல புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தியதற்காக 5457 வழக்குகளில் 5037 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.420 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சென்னை பூந்தமல்லியில் 1200 கிலோ, திருச்சியில் 540 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 66 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆபரேசன் 2.0 கஞ்சா வேட்டை
ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில், மேலும் ஒரு மாதம் அதிரடி நடவடிக்கையை தொடர வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

கடத்தல் பதுக்கல் விற்பனை சங்கிலி
இந்த நடவடிக்கையை, இன்று முதல் ஏப்ரல் 27 வரை 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற பெயரில் தொடர வேண்டும். பள்ளி மற்றும் கல்லுாரி அருகே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும். கடத்தல் பதுக்கல் விற்பனை சங்கிலி தொடரை உடைக்க வேண்டும். ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கைப்பற்ற வேண்டும்.

குண்டர் சட்டத்தில் கைது
போதை பொருள் விற்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். போதை பொருள் விற்பவர்கள் பின்னணியில் இருப்பவர்களை கண்காணிக்கும் பொறுப்பை காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணிகளை, மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கண்காணித்து கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். சென்னை, ஆவடி, தாம்பரம் காவல்துறை ஆணையர்கள் போதை பொருள் ஒழிப்பு பணியில் நேரடியாக கவனம் செலுத்தி அறிக்கை தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications