இரட்டை இலை யாருக்கு? தீர்ப்பு சொல்லும் தேர்தல் ஆணையம்? டெல்லிக்கு பறக்கும் தலைகள்.. அதகள அதிமுக!
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பதில் அளித்துள்ள நிலையில், அவர்களது பிரதிநிதிகள் இன்று டெல்லி பறந்துள்ளனர்.
அதிமுகவின் அடையாளமான இரட்டை இலை சின்னம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் ஓபிஎஸ், சசிகலா தரப்பால் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

அதே நேரத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அது நீதிமன்றம் வரை வந்திருக்கிறது. அடுத்தடுத்து சூரியமூர்த்தி, பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட்டோர் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம்:
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
தேர்தல் ஆணையம்:
இந்நிலையில், தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, சூர்ய மூர்த்தியின் மனு குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.
எடப்பாடி பழனிசாமி:
இந்த நிலையில் அதிமுக சின்னம் தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சூரியமூர்த்தி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள தேர்தல் ஆணையம் 19ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படியும், இன்று தேதி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிட்டது.
ஓ.பன்னீர்செல்வம்:
இதை அடுத்து தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்ட நிலையில், ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்-க்கு அதிமுகவின் பொது செயலாளர் என்ற வகையில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஆன ஓ.பன்னீர்செல்வமும் தனது வழக்கறிஞர் மூலமாக மின்னஞ்சலில் பதில் அனுப்பினார்.
தேர்தல் ஆணையம் விசாரணை:
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பதில் அளிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி ஆகியோர் தரப்பிலும், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் தரப்பிலும் இன்று தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜராக இருக்கின்றனர்.
நேரில் விளக்கம்:
இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு வழக்கறிஞர்கள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர். இன்று விசாரணை நடைபெற்ற பிறகு இது தொடர்பான அறிக்கை டெல்லி உயர் நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு பிறகு இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எடப்பாடி தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications