சென்னை வந்த திரௌபதி முர்மு.. தனித்தனியாக சந்தித்து ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ், இபிஎஸ்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை வரவேற்க நட்சத்திர ஹோட்டலுக்கு எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் வருகை தந்துள்ளனர்.
சென்னை: ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் தனித்தனியாக பிரிந்துள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை தனித்தனியாக சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
Recommended Video
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார் எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

யஷ்வந்த் சின்கா இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய நிலையில், பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று சென்னை வந்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் என இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அந்த பதவி தற்போது இல்லையென இபிஎஸ் தரப்பு கூறி வருகிறது.
எனவே ஓபிஎஸ் தற்போது அதிமுக பொருளாளர் பதவியில் இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையேற்று ஓபிஎஸ் டெல்லி சென்றார். அதே போல இபிஎஸ் தரப்பில் தம்பிதுரை கலந்து கொண்டார்.
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் தனித்தனியாக பிரிந்துள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை வரவேற்கும் நிகழ்ச்சியில் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
சென்னை வந்துள்ள திரௌபதி முர்முவை வரவேற்க நட்சத்திர ஹோட்டலுக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்த நிலையில் அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் வந்தார். இருவரும் தனித்தனி அறையில் தங்கியிருந்தனர். ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை இருவரும் தனித்தனியாக சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்












Click it and Unblock the Notifications