இரட்டை இலை வேட்பாளருக்கே ஆதரவு.. ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து போட்டியிட வேண்டும்- ஜான் பாண்டியன்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் ஆதரவு கொடுக்க முடியும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதனால், தேர்தல் களத்தில் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
அதிமுக கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஓ பன்னீர் செல்வம் ஆதரவு கோரி வருகிறார். மறுபக்கம் கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வேலையில் எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஈடுபட்டுள்ளனர்.

ஜான் பாண்டியன் பேட்டி
அந்த வகையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியனுடன் இபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சந்தித்தார்கள். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது.

ஓ பன்னீர் செல்வம் என்னை சந்திக்கிறார்
எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் முழு ஆதரவு அளிக்கிறது. யாரை அவர்கள் நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து வெற்றி பெறுவதற்கு பாடுபடுவோம். ஓ பன்னீர் செல்வமும் என்னை சந்திக்க இருக்கிறார். ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே நிலவும் பிரச்சினைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அவர்க்ள் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அதிமுகவிற்கு ஆதரவு கேட்டுள்ளார்கள்.. நான் கொடுத்துள்ளேன்.

பாஜக போட்டியிட வாய்ப்பு இல்லை
ஓ பன்னீர் செல்வம் இன்று மாலை என்னை சந்திக்க இருக்கிறார். அவரிடம் கலந்துரையாடி இரண்டு பேரையும் ஒன்றாக சேர்ப்பதற்கு நான் முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன். அதுதான் என்னுடைய பணியாக இருக்கும். இருவரும் பிரிந்து இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய ஆசை.. மக்களுடைய ஆசை.. எனவே அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு.. ஏன் ஒன்றாக நிற்கலாமே என சொல்லப்போகிறேன். பாஜக போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை.

இரட்டை இலை எங்கு இருக்கிறதோ
அதிமுகதான் நிற்கும் என்பது நம்பிக்கை. பாஜக போட்டியிட்டால் அப்போது பார்ப்போம். அதிமுகவில் பொதுக்குழு யாரை முடிவு செய்கிறதோ அதுதான் அதிமுக. அதன் அடிப்படையில்தான் நாம் முடிவு எடுக்க முடியும். ஓ பன்னீர் செல்வம் வருவதாக சொல்லியிருக்கிறார். பேசி பார்க்கிறேன். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் ஆதரவு கொடுக்க முடியும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications