ஆபரேஷன் தென் மாவட்டங்கள்.. ஓபிஎஸ் தரப்பைக் கழற்றிவிட்ட பாஜக.. நயினாரை கொண்டு வந்ததே அதற்குத்தான்!
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், இது பாஜகவின் திட்டமாகவே பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் பாஜக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ஓபிஎஸ் இடத்தை நிரப்ப பாஜக திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே நயினார் நாகேந்திரனை பாஜக மாநிலத் தலைவராகக் கொண்டு வந்திருக்கிறது.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் பாஜக கூட்டணி சார்பாக சுயேட்சை வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். ஓபிஎஸ் கூட்டணியில் இணைந்ததன் காரணமாக தேனி, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாஜக வேட்பாளருக்கு முக்குலத்தோர் சமூக மக்களின் வாக்குகள் அதிகளவில் கிடைத்தன. தொடர்ந்து ஓபிஎஸ் பலம் அறிந்து கொண்ட பாஜக, தொடர்ந்து அவருடன் பயணித்து வந்தது.

ஆனால் சட்டசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, தமிழ்நாட்டில் இருந்து பாஜகவுக்கு எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் கிடைப்பார்கள் என்பதும் புரிய வந்தது. இதன் காரணமாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தார். அதேபோல் ஓபிஎஸ் தரப்பைக் கழற்றிவிடவும் ஒப்புக் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் ஆதரவு வாக்குகளை அறுவடை செய்யவே தமிழக பாஜகவின் தலைவராக நயினார் நாகேந்திரன் கொண்டு வரப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. முக்குலத்தோர் சமூகத்தின் ஆப்பநாட்டு கொண்டயன்கோட்டை மறவர் என்ற பெரும்பான்மை பிரிவைச் சேர்ந்தவர் நயினார் நாகேந்திரன். திருநெல்வேலி மட்டுமல்லாமல் ராமநாதபுரம், தேனி, கமுதி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலும் மறவர் சமூகமே பெரும்பான்மை.
இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களை தன் பக்கமாக இழுக்கவே பாஜக திட்டமிட்டு நயினார் நாகேந்திரனை கொண்டு வந்திருக்கிறது. முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் அளவிற்கு நயினார் நாகேந்திரனுக்கு செல்வாக்கு இல்லையென்றாலும், அவரை வளர்க்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள செல்வாக்கை அடுத்தடுத்த மாவட்டங்களிலும் உருவாக்க அவருக்கு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் முக்குலத்தோர் சமூக வாக்குகள் மொத்தமாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிராகத் திரும்பிவிடக் கூடாது என்பதால், டிடிவி தினகரனை சரியான நேரத்தில் அதிமுக வைத்து அரவணைத்து வருகிறது. இதன் மூலமாகக் கள்ளர் சமூக வாக்குகள் அதிமுக மற்றும் பாஜகவுக்கு கிடைக்கும். அதேபோல் முக்குலத்தோர் சமூக தலைவர்களில் ஓபிஎஸ் தவிர்த்து மற்றவர்களைச் சேர்க்கவும் அதிமுக விரும்புகிறது.
இதனால் ஓபிஎஸ் தரப்பைக் கழற்றிவிட எடப்பாடி பழனிசாமி ஒரு காரணமாக அமைந்தாலும், முதல் காரணமாக பாஜகவே இருக்கிறது. தென் மாவட்டங்களில் தங்களின் கட்சியை வளர்ப்பதற்காக ஓபிஎஸை கழற்றிவிடும் முடிவை பாஜக எடுத்திருக்கிறது. இது பாஜகவுக்கு பலன் கொடுக்குமா என்பதை சட்டசபைத் தேர்தல் முடிவில் தெரியும்.












Click it and Unblock the Notifications