எடப்பாடிக்கு மெகா சிக்கல்! அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க ஓபிஎஸ் மனு
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புதிய கோரிக்கை மனு விடுத்துள்ளார். அதாவது லோக்சபா தேர்தலில் அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, திமுக தரப்பில் கூட்டணியும் தொகுதிப் பங்கீடும் இறுதியாகிவிட்டது. வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பும் வரிசையாக வெளியாகி வருகிறது.

ஆனால், அதிமுக பக்கம் அப்படி இல்லை. அதிமுகவில் கூட்டணி கூட இன்னும் இறுதியாகாமலேயே இருக்கிறது. அதிமுகவில் ஓபிஎஸ் வேறு இரட்டை இலை சின்னத்தை தனக்குத் தர வேண்டும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
புதிய மனு: இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று ஓபிஎஸுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. லோக்சபா தேர்தலில் தனக்குத் தான் நிச்சயம் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று ஓபிஎஸ் கூறி வந்த நிலையில், அதற்கு நேர் எதிராக இந்த தீர்ப்பு அமைந்துவிட்டது.
நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புதிய கோரிக்கை மனு விடுத்துள்ளனர். அதாவது லோக்சபா தேர்தலில் அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதி கோரி ஓபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளது.
கோரிக்கை: மேலும், அதிமுக சார்பில் படிவம் ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர். அதாவது வேட்பாளர் மற்றும் சின்னத்தை அங்கீகரித்துக் கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடைக்கால நிவாரணமாக அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கோரிக்கை விடுத்தும் மனு அளித்துள்ளனர். மேலும், லோக்சபா தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஓபிஎஸ் பிளான்: இந்த மனுவின் மூலம் ஓபிஎஸ் திட்டம் என்ன என்பது தெரிகிறது. எப்படியாவது இரட்டை இலை சின்னத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே அவர் இதைச் செய்கிறார். ஒரு வேலை தனக்குக் கிடைக்கவில்லை என்றாலும் சின்னத்தை மொத்தமாக முடக்க வேண்டும் என்ற முடிவில் ஓபிஎஸ் இருப்பது போலவே தெரிகிறது.
இந்தியாவில் மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல் கட்டத்திலேயே, அதாவது வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதன் பிறகு 6 கட்ட தேர்தலுக்குப் பிறகு ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications