கோவை டூ கொச்சி டூ டெல்லி.. பாஜக அழைத்ததால் தலைநகரில் ஓபிஎஸ்.. உண்மையை சொன்ன சுப்புரத்தினம்!
சென்னை: டெல்லி பாஜக தலைவர்களின் அழைப்பின் பெயரிலேயே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அவரின் ஆதரவாளர் சுப்புரத்தினம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஒரு முடிவு எடுப்பதற்கு முன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக விரும்பியதாக கூறிய அவர், அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அண்மையில் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ், கடந்த வாரம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, இனி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக செயல்படும் என்று அறிவித்த ஓபிஎஸ், டிசம்பர் 15ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட போவதாகவும் கூறினார். இதனால் ஓபிஎஸ் புதியக் கட்சியை தொடங்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

அதற்கான பணிகள் 9 சதவிகிதம் முடிவடைந்துவிட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகியது. இந்த சூழலில் ஓபிஎஸ் மருத்துவ சிகிச்சைக்காக கோவையில் முகாமிட்டிருந்தார். அப்போது டெல்லி பாஜகவிடம் இருந்து சந்திக்க அழைப்பு வந்திருக்கிறது. இதையடுத்து கோவையில் இருந்து உடனடியாக கொச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லிக்கு பயணித்துள்ளார்.
நேற்று முதல் நாளாக டெல்லியில் சில சந்திப்புகளை நடத்தியுள்ள ஓபிஎஸ், இன்று 2வது நாளாகவும் டெல்லியிலேயே இருக்கிறார். இந்த நிலையில் டெல்லி பாஜகவின் தலைமை அழைப்பு விடுத்ததன் பெயரிலேயே ஓபிஎஸ் டெல்லி சென்றிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் சுப்புரத்தினம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியை மட்டும் நம்பி பாஜக தேர்தலில் போட்டியிடுவது அரசியல் தற்கொலை முடிவாக அமையும்.
அதனால் ஓபிஎஸ் ஒரு முடிவுக்கு எடுப்பதற்கு முன் அவரை அழைத்து பேசுவது சரியாக இருக்கும் என்ற அடிப்படையில், டெல்லி பாஜக தலைமை தொடர்பு கொண்டு அழைத்துள்ளது. டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ், பாஜகவின் தேசிய தலைமையை சந்திக்க உள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா உள்ளிட்டோர் சந்திக்க அழைத்துள்ளனர். அந்த சந்திப்பிற்கான அழைப்பை நிராகரிப்பது சரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ், அமித்ஷாவுடன் சுமார் 20 நிமிடங்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆலோசனையின் போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. புதிய கட்சி தொடங்கும் முடிவில் இருக்கும் ஓபிஎஸ், அமித்ஷாவை சந்தித்த போது தனது முடிவை மாற்றிக் கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications