சைலண்ட் மோடுக்கு போன ‘சவுத்’ என்னப்பா இதெல்லாம்.. கடுகடுத்த ஓபிஎஸ்! ஆனாலும் ஹாப்பி தானாம்! என்னவாம்?
சென்னை : கடந்த மாதத்தை போல தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் போராட்டங்கள் என நடக்காததால் அதிருப்தியில் ஓபிஎஸ் இருந்தாலும் நேற்று வெளியான ஆடியோ விவகாரத்தில் எதிரணியில் குழப்பம் ஏற்பட்டதால் மகிழ்ச்சியாகவே இருப்பதாக கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்..
ஒருவழியாக பலகட்ட பஞ்சாயத்துகள், பேச்சுவார்த்தைகள், சட்டப் போரட்டங்களுக்குப் பிறகு தான் நீண்ட நாள் எதிர்பார்த்த காரியத்தை சாதித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதாவது அதிமுகவின் ஒற்றை தலைமையால் தான் வர வேண்டும் என்ற மூன்றாண்டு கனவு நிறைவேறி இருக்கிறது.
ஆரம்பத்தில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட்டாலும் நாட்கள் செல்லச் செல்ல இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது. வேட்பாளர் தேர்வு தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை ஓபிஎஸ்ஸையே சார்ந்து இருக்க வேண்டிய அல்லது அவரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டதால் தான் தனி தலைமையாக உருவெடுக்க வேண்டும் என நினைத்தார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு
இதை எடுத்து சைலண்டாக காய்களை நகர்த்திய எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்குள்ளும் தனது ஆதரவு வட்டத்தை பெருக்கிக் கொண்டார் தனக்கான ஆதரவு அதிகபட்சம் இருக்கிறது என்பதனை உறுதி செய்த பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயக்குமாரை வைத்து ஒற்றை தலைமை பிரச்சனையை எழுப்பினார் அதன் பிறகு நடந்தது அனைத்தையும் அனைவரும் அறிவோம். முதலில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்துக்கு மரியாதை கொடுத்திருந்தாலும் சக நிர்வாகிகள் அவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் அதிரடி
குறிப்பாக ஜெயலிதாவுக்கு அடுத்த இடத்தில் வைத்து அழகு பார்க்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த கட்சியினராலேயே பொதுக்குழு கூட்டத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார். தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது, வாகனம் பஞ்சர் செய்யப்பட்டது என அடுத்தடுத்து அவர் அவமானங்களை சந்தித்து நிலையில் பல மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்தது. குறிப்பாக திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்க்காண ஆதரவு சற்று அதிகமாகவே இருந்தது. அரைக்கம்பத்தில் அதிமுக கொடியை பறக்க விடுவது, எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படங்களை கிழிப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது என அதிரடி காட்டினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

பதவி நீக்கம்
இதனால் உற்சாகமடைந்த அவர் இரண்டாவது பொதுக் குழுவை எப்படியாவது நிறுத்தி விடலாம் நினைத்தார். ஆனால் அதுவும் கைகூடவில்லை. இருந்தபோதும் தென்மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கில் ஆட்களை திரட்டி சென்னைக்கு அழைத்துச் சென்று அதிமுக அலுவலகத்தை கைப்பற்றும் அளவுக்கு அதிரடி அரசியலை கையில் எடுத்தார் ஓபிஎஸ். ஆனால் தற்போது பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சூட்டோடு சூடாக ஓபிஎஸ்ஐ கட்டி கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த அதிரடியாக திண்டுக்கல் சீனிவாசனை அந்த பதவிக்கு கொண்டு வந்து அனைத்து கணக்கு வழக்குகளையும் இனி அவர்தான் பார்ப்பார் என கூறினார்.

தென் மாவட்டங்களில் அமைதி
ஆனால் கடந்த முறை போல இந்த முறை தென் மாவட்டங்களில் எந்த எதிர்ப்பும் விழவில்லை குறிப்பாக ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்திலேயே எந்த எதிர்ப்புகளும் இல்லாததால் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். மேலும் தனது நெருக்கமான நிர்வாகிகள் மற்றும் வாரிசுகளை அழைத்து என்ன நடக்கிறது என கேட்டு அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஏன் அவரது தரப்பில் ஆவேசமாக பேசி வந்த மாவட்ட செயலாலளர்களே சைலண்ட் மோடுக்கு போய்விட்டனர். மேலும் பலர் எடப்பாடி தரப்பிடம் பேசி வந்திருப்பதாக கிடைத்த தகவலும் அவருக்கி கிடைக்க மேலும் அப்செட் ஆகியுள்ளார்.

ஓபிஎஸ் உற்சாகம்
இந்நிலையில் இந்த நிலையில்தான் பொன்னையன் ஆடியோ விவகாரம் ஓபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. ஆடியோவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு இல்லை என்பது போல பேசி இருந்தாலும் அது இல்லை என பொன்னையன் மறுத்தார். அதே நேரத்தில் மிமிக்கிரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அவருடன் பேசியதாக கூறப்படும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகி கோலப்பன் கூறியிருந்தார். ஆடியோ உண்மையோ பொய்யோ எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இதன் காரணமாக குழப்பம் ஏற்பட்டு இருப்பதும் இதனால் அடுத்தடுத்து அங்கு சில சச்சரவுகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி அணியில் இருந்தாலும் அவர் மீது அதிருப்தியில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகளின் ஆதரவை பெற முடியுமா என ஆலோசித்து வருகின்றனர். மேலும் அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் மூலம் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கவும் ஓபிஎஸ் தரப்பு தயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications