பாஜக கூட்டணியில் இருந்து வெளிவந்த சில மணி நேரங்களில்.. ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. என்ன நடந்தது?
சென்னை: பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அவரின் வீட்டிற்கு வந்திருக்கிறார். இன்று காலை ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் இருவரும் நடைப்பயிற்சியின் போது சந்தித்துக் கொண்ட நிலையில், ஒரே நாளில் 2வது முறையாக சந்திப்பு அரங்கேறி இருக்கிறது.
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. விரைவில் ஓபிஎஸ் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சூழலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஓபிஎஸ் தரப்பின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே இன்று காலை அடையார் பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட போது, முன்னாள் முதல்வர் ஓபிஎஸை சந்தித்தார். இந்த சந்திப்பு எதேச்சையானது என்று கூறப்பட்டது. அப்போது ஸ்டாலினின் உடல்நிலை குறித்து ஓபிஎஸ் கேட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஓபிஎஸ் வந்திருக்கிறார். சென்னையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் வீட்டிற்கு வந்த ஓபிஎஸ், சில நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். இந்த சந்திப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டு வருகிறது.
ஆனால் பாஜக உடனான கூட்டணியை முறித்த சில மணி நேரங்களிலேயே ஓபிஎஸ், ஸ்டாலின் வீடு தேடிச் சென்றிருக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததன் காரணமாக ஓபிஎஸ் அரசியலில் தனித்துவிடப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. அவருக்கு முன்பாக திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இருக்கின்றன.
தவெக புதியக் கட்சி என்பதோடு, அரசியலில் ஜூனியரான விஜய்க்கு கீழ் ஓபிஎஸ் செயல்பட ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி உள்ளது. இதனால் ஸ்டாலினை சந்தித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விரைவில் ஓபிஎஸ் புதியக் கட்சியைத் தொடங்குவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், திமுகவோடு கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து வந்த ஏராளமான நிர்வாகிகளை திமுக அரவணைத்து சென்றிருக்கிறது. அண்மையில் அன்வர் ராஜாவை கூட மிகுந்த மரியாதையோடு திமுக சேர்த்துக் கொண்டது. இதனால் ஓபிஎஸ் தரப்பை நேரடியாக சேர்த்துக் கொள்ளவில்லை என்றாலும், புதியக் கட்சி தொடங்கினால் திமுக கூட்டணியில் இணைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications