அடுத்தடுத்து நடக்கும் "சம்பவங்கள்!" எடப்பாடிக்கு அழுத்தம் தர ஒன்று சேரும் 3 தலைகள்.. ஓபிஎஸ் பிளான்?
சென்னை: அதிமுகவில் கட்சி விவகாரம் இன்னும் கூட முடியாத நிலையில், அங்குத் தொடர்ச்சியாக பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவில் இருந்தே பல்வேறு குழப்பங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே தான் இருக்கிறது. இது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.
ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் உட்கட்சி விவகாரம் தொடர்பாகச் சிறு தகவல் கூட கசியாது. ஆனால், இப்போது அதிமுக விவகாரம் தான் மாநிலமே பேசுபொருளாகி உள்ளது.

இரட்டை தலைமை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக சசிகலா கட்டுப்பாட்டிற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக நடைபெற்ற பல்வேறு திருப்பங்கள் காரணமாக எடப்பாடி- ஓபிஎஸ் தரப்பின் கீழ் கட்சி வந்தது. இருப்பினும், இந்த இரட்டை தலைமைத் தேர்தலில் வெற்றிகரமாக இல்லை. நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டசபைத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் தோல்வியையே சந்தித்தது.

ஒற்றை தலைமை
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடிக்கு இடையே பூசல்கள் இருந்து கொண்டே தான் இருந்தது. அது சமீப காலத்தில் பகிரங்கமாக வெடித்தது. கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ஜெயக்குமார் முதலில் கொளுத்திப் போட, அது மளமளவென விஸ்வரூபம் எடுத்தது. சில நாட்களிலேயே வெகு சிலரைத் தவிர, அனைவரும் எடப்பாடி தரப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். இம்மாத தொடக்க்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார். மேலும், ஒபிஎஸ் உள்ளிட்டோரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி மகிழ்ச்சி
முதலில் எடப்பாடி தரப்புக்கே அடுத்தடுத்து சாதகமான செயல்கள் நடந்தன. சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி தரப்புக்கு ஒப்படைக்க நீதிமன்றமே கூறியது. அதேபோல அதிமுக கணக்கு வழக்குகளும் எடப்பாடி தரப்புக்குக் கொடுக்கப்பட்டது. இது ஓபிஎஸுக்கு சிக்கலைத் தரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் எடப்பாடி தரப்புக்குச் சிக்கலைத் தருவதாக உள்ளது.

ஏமாற்றம்
முதலில் டெல்லி வந்த எடப்பாடிக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது. அவரால் திட்டமிட்டபடி பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அவர் சென்னை திரும்பினார். இடையே குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மீதான சிபிஐ விசாரணைக்கு அனுமதி கோரி இருந்த நிலையில், அதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. மேலும், தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், முதலில் ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு தரவில்லை என்றாலும் கூட, பின்னர் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஓபிஎஸ்
இந்தச் சம்பவங்கள் பன்னீர்செல்வத்திற்கு உற்சாகம் தருவதாக இருந்தது. இதைவிட முக்கியமாக, ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை செயல்பட விடாமல் தடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்தார். அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில் செயல்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை, கழகத் தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

சம்பவங்கள்
நாடாளுமன்றத்தில் அதிமுக பெயரைச் சொல்வதற்கு யாருமே வேண்டாம் என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் கழகத் தொண்டர்கள் ஒரு நியாயமற்ற செயல் தான் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனிடையே இன்று தேனி மாவட்ட அமமுக செயல்வீரர்கள்- வீராங்கனைகள் கூட்டத்தில் பங்கேற்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தேனி சென்று இருந்தார்.

யார் இவர்
அங்கு அதிமுக தேனி மாவட்டச் செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சையது கான் அவரை நேரில் நசித்து உற்சாக வரவேற்பு கொடுத்தார். தேனி மாவட்டச் செயலாளர் சையது கான், அதிமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் டிடிவி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முன்னதாக, கடந்த மார்ச் மாதம் தான், ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிலேயே கூடி சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என இதே சையது கான் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

அழுத்தம் தரத் திட்டம்
ஏற்கனவே, சசிகலா தரப்பின் ஆதரவைப் பெற ஓ. பன்னீர்செல்வம் தரப்பு முயல்வதாகத் தகவல் வெளியான நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியது முதலே ஓ. பன்னீர்செல்வம் தொடர்ச்சியாகப் பலத்த பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறார். இதன் காரணமாக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து அவர் எடப்பாடி பழனிசாமியை எதிர்கொள்வார் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications