அரசியலில் நிரந்தர நண்பரும் இல்ல.. எதிரியும் இல்லை.. திமுகவுடன் கூட்டணியா? சூசகமாக சொன்ன ஓபிஎஸ்
சென்னை: திமுக உடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுடன் சுமார் 50 நிமிடங்கள் ஓபிஎஸ் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் ஓபிஎஸ் தரப்பு, பாஜக உடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியில் வருவதாக அறிவிக்கப்பட்டது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தற்போது எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்து அடுத்த 2 மணி நேரத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஓபிஎஸ் அவரது வீட்டிற்கே சென்றார். அவருடன் வைத்திலிங்கம், ஓபி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் இருந்தனர். சுமார் 50 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்தது. இதன்பின் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.
முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே வந்தேன். அதேபோல் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்தேன். இந்த சந்திப்பில் அரசியல் நிமித்தமாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறதா அல்லது ஜெயலலிதா பாணியில் திமுகவை தீயசக்தியாகவே பார்க்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஓபிஎஸ், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை.. எதிரிகளும் இல்லை என்பதே கடந்த கால வரலாறு.. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும் போது எதுவும் நடக்கலாம். பாஜக தரப்பில் இதுவரை யாரும் என்னைத் தொடர்பு கொள்ளப்படவில்லை. எனக்கென்று அரசியலில் சுயமரியாதை இருக்கிறது. ஜெயலலிதாவிடம் 25 ஆண்டுகள் நேரடிப் பார்வையில் பணியாற்றி இருக்கிறேன்.
இன்றைய சூழலில் எனக்கு ஒரு வருத்தம் உள்ளது. கல்வி நிதி தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை. அதனால் கல்வி நிதி நிறுத்தி வைத்துள்ளோம் என்ற கல்வி அமைச்சர் கூறுகிறார். இது ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல என்பதே கருத்து. மக்களை பாதிக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் நான் கண்டித்து வருகிறேன்.
தேசிய அளவில் பிரதமர் மோடி ஒரு கூட்டணியை அமைத்தார். யார் பிரதமராக வர வேண்டும் என்ற தேர்தல் வரும் போது, எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுத்தார்? ஒரு வாரத்திற்கு முன்பாக பிரதமர் அருகில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமி, பின் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டார். இப்போது மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். அதற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications