பொதுகுழுவை தடுக்க புது “ரூட்” - கையெழுத்து மேட்டரை கையிலெடுத்த ஓபிஎஸ் தரப்பு.. அசராத எடப்பாடி குரூப்
சென்னை: உயர்நீதிமன்றத்தின் மூலம் அதிமுகவின் முந்தைய பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமை கனவை தகர்த்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுக் கூட்டத்தையும் தடுப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.
Recommended Video
சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த சில நாட்கள் முன் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது.
அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததால் ஓ.பி.எஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். அடுத்தடுத்த நாட்களில் இரு தரப்பினரும் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது. கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

தடுக்க முயலும் ஓபிஎஸ் தரப்பு
இதன் தொடர்ச்சியாக இருதரப்பினரும் போஸ்டர்கள், பேட்டிகளில் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவிக்கையில், "தலைமை கழகம் என்ற பெயருடன் பொதுக்குழுவுக்கு அழைப்பது முறையல்ல. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு மீண்டும் கிடைத்தபோது பொருளாளர் பொறுப்பில் இருப்பவரிடமே சின்னம் வழங்கப்பட்டது. அவருக்குதான் கட்சியை வழிநடத்தும் அதிகாரம் உள்ளது." என்றார்.

சட்டப்போராட்டம்
இதனை தொடர்ந்து பொதுக்குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தது. 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவை எடப்பாடி பழனிசாமி தரப்பு மீறியதாக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை வர இருந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த உயர்நீதிமன்றம் கடந்த 23 ஆம் தேதி பிறப்பித்த புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர். சென்னை உயர்நீதிமன்றமும், முன்னதாக தடை விதிக்க மறுத்ததுடன் ஒருநபர் அமர்வுதான் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கையெழுத்து சர்ச்சை
இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பால் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும் என்ற வாதத்தை கையில் எடுத்திருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், "தலைமைக் கழகம் என்ற பெயரில் பொதுக்குழு கடிதம் வந்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட தலைமை கழகத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது." என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications