இபிஎஸ் கேம்பிற்கு தாவிய ஓபிஎஸ் ஆதரவாளர் வேளச்சேரி அசோக்.. அதிமுகவில் அடுத்தடுத்த ட்விஸ்ட்!
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வேளச்சேரி அசோக் தனது ஆதரவையும் தெரிவித்தார்.
நாளை அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தொண்டர்களும் நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். மேலும் இரட்டை தலைமையால் கட்சி தேய்ந்தது என்றும் வளரவே இல்லை என்றும் தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

ஓபிஎஸ் தர்மயுத்தம்
கடந்த 2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொருவராக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி வருகிறார்கள். தர்மயுத்தம் நடத்திய போது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த மாஃபா பாண்டியராஜன் நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது ஆதரவை அளித்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் அவரது வலதுகரம் என சொல்லப்படுவருமான தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் வேளச்சேரி அசோக் தற்போது கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அசோக்
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அசோக் கூறுகையில், அதிமுகவின் வளர்ச்சிக்கு ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்க வந்தேன். ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும், அதைத்தான் நான் செய்துள்ளேன். நாளை நடைபெறும் பொதுக் குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருவார் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அங்கு எடுக்கப்படும் முடிவுகளை ஏற்பாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.

12 மாவட்டச் செயலாளர்கள்
ஓபிஎஸ்ஸுக்கு 12 மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5 மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவினர். இதனால் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் பலம் 7 ஆக குறைந்தது. இந்த நிலையில் வேளச்சேரி அசோக் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவியதால் ஓபிஎஸ்ஸுக்கு மாவட்டச் செயலாளர்களின் பலம் 6 ஆக குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications