சசி ஆதரவு: ஒழுங்கு நடவடிக்கை எடுத்துதான் பாருங்களேன்-எடப்பாடி தூதரை கடுமையாக எச்சரித்தாரா ஓபிஎஸ்?
சென்னை: சசிகலா ஆதரவு விவகாரத்தில் அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடுமையான விரிசல் ஏற்பட்டுவிட்டது.. இதை சரி செய்வது அவ்வளவு எளிது அல்ல என்கின்றனர் அக்கட்சியின் சீனியர் தலைவர்கள்.
சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள்தான் முடிவு செய்வார்கள் என கொளுத்திப் போட்டார் ஓ.பன்னீர்செல்வம். அவர் பற்ற வைத்த நெருப்பு கனஜோராக எரிந்து கொண்டிருக்கிறது.
இப்போது சசிகலாவை சேர்க்கலாம் என்கிற ஓபிஎஸ் கருத்துக்கு ஆதரவாகவும் சசிகலாவை சேர்க்க கூடாது என்கிற நிலைப்பாட்டுடனும் அதிமுக இரு அணிகளாக பிரிந்து நிற்கின்றன. இந்த நிலையில் டிடிவி தினகரன் தரப்பு மீண்டும் ஓபிஎஸ் தரப்புடன் பகிரங்கமாக கை கோர்த்திருக்கிறது.

தினகரனுடன் சமாதானம்
தர்மயுத்தம் நடத்திய கட்டத்தில் டிடிவி தினகரனை மிக காட்டமாக விமர்சித்தவர் ஓபிஎஸ். ஆனால் சசிகலா ஆதரவு என்கிற நிலைப்பாடு எடுத்தது முதல் இருதரப்பும் அமைதியை கடைபிடித்து வந்தது. இந்நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கலாம் என்கிற அடிப்படையில் ஓபிஎஸ் தெரிவித்த கருத்தை டிடிவி தினகரன் வெளிப்படையாக வரவேற்றார். அத்துடன் டிடிவி தினகரன் வசம் உள்ள நமது எம்ஜிஆர் நாளிதழும் முதல் பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. இதன் அடுத்த கட்டமாக டிடிவி தினகரன் மகளின் திருமண வரவேற்பில் ஓபிஎஸ் சகோதரர் ராஜா பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

நடவடிக்கை எடுக்கலாமே?
இது ஒருபக்கம் இருக்க ஓபிஎஸ் மீது எடப்பாடி தரப்பு கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படும் தகவல்களை நேற்றே நாம் பதிவு செய்திருந்தோம். கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவோ, கட்சியின் முடிவுகளுக்கு எதிராகவோ கருத்துக்களை தெரிவிக்கும் இரண்டாம் நிலை தலைவர்களை கட்டம் கட்டுகிறோம்; அதே தவறை மூத்த தலைவர்கள் செய்தால் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால் அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார். அவரிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அதிமுக முடிவு செய்து தீர்மானமும் நிறைவேற்றியது. தற்போது சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் கருத்து தெரிவிக்கிறார் ; அவரது கருத்துக்கு ஆதரவு கொடுக்கிறார் ஜேசிடி பிரபாகரன். கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டுள்ள இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் எடப்பாடியிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video

ஓபிஎஸ்ஸிடம் பேசிய தூதர்
இந்த கருத்தை சற்று அதிர்ச்சியுடன்தான் முதலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்கொண்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது நியாயமான கேள்வி தானே என நினைத்து என தமது ஆதரவாளர்களுடன் விவாதித்திருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. இதனடிப்படையில்தான் ஓபிஎஸ்ஸிடம் எடப்பாடி பழனிசாமியின் தூதர் பேசியதாக கூறப்படுகிறது. இந்த உரையாடலில்தான் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் எடப்பாடி தரப்பு தயங்காது என ஓபிஎஸ்ஸிடம் வெளிப்படையாகவே எடப்பாடி தூதர் கூறியதாக வெளியான தகவலையும் நாம் பதிவு செய்திருந்தோம். எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய முடிவு குறித்து அவரது தூதரிடம் ஓபிஎஸ் தெரிவித்ததாக கூறப்படும் காட்டமான கருத்துகள்தான் இப்போது அதிமுக சீனியர்களிடையே ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

எடப்பாடி தூதருக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை
எடப்பாடியின் தூதரிடம், அவர்தான் இப்படி கேட்கச் சொன்னாரா? இல்லே நீங்களே கேட்கிறீங்களா ? உங்களுக்கான கட்சி அதிகாரத்தின் படி கேட்கிறீர்களோ? என கோபத்தை முதலில் காட்டினாராம் ஓபிஎஸ். அத்துடன் இதோ பாருங்க... இந்த புகைச்சல் எப்படி வருதுன்னு எனக்கு தெரியும் , யார் ஊதுறாங்கன்னும் எனக்கு தெரியும். அவர்கிட்ட சொல்லுங்க. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமெனில் எடுத்துதான் பாருங்க. நான் அதை சந்திக்கவும் தயாராகத்தான் இருக்கிறேன் என்று ஏகத்துக்கும் வெடித்தார் ஓபிஎஸ் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள். இதுநாள் வரை ஓபிஎஸ்ஸிடம் இருந்து இப்படியொரு கோபத்தை தாம் பார்த்ததில்லை என்று எடப்பாடியிடம் அந்த தூதர் அதிர்ச்சியுடன் சொல்லி புலம்புகிறார் என்பதுதான் இப்போது மூத்த தலைவர்களிடையே பேசுபொருளாக இருக்கிறது என்பது அதிமுக வட்டார தகவல்கள்.












Click it and Unblock the Notifications