ஒரு கை பார்த்துருவோம்..டெல்லிக்கு போனை போட்ட ’தலை’! சுப்ரீம் கோர்ட் கதவை தட்டும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கின் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக நேற்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக டெல்லியில் வழக்கறிஞர்கள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த 17ம் தேதி தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கேட்டுச்சா.. ‛இடைக்கால’ இல்லை.. அதிமுக நிரந்தர பொதுச்செயலாளரே இபிஎஸ் தான்!அழுத்திய மாஜி அமைச்சர்கள்
எடப்பாடி பழனிசாமி
பின்னர் நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவு எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த பதினெட்டாம் தேதியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் நீதிபதிகள் துரைசாமி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று தீர்ப்பினை வழங்கினர்.
மீண்டும் ஓங்கிய இபிஎஸ் கை
அதில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். மேலும், அந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதாக உள்ள தீர்மானமும் செல்லத்தக்கதாகி விட்டது.
ஓபிஎஸ்க்கு பாதகம்
இந்நிலையில் இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பாதகமாக அமைந்துள்ளாதால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் நேற்று தேனியில் இருந்து சென்னை செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என கூறினார். இதனையடுத்து அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
மேல்முறையீடு
இதையடுத்து சென்னை சென்ற ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்களிடமும் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்வது உறுதியாகியுள்ளது. திங்கட்கிழமை இது தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.