10 மணி நேரமாக தவெக வாசலில் போராட்டம்.. கண்டுக்காத விஜய்.. ஆனாலும் அஜிதா சொன்ன வார்த்தை
சென்னை: உயிருள்ள கடைசி நொடி வரை விஜயுடன் மட்டுமே எங்களது பயணம் தொடரும் என்றும், தலைமை மீதும் தளபதி விஜய் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா பேட்டியளித்துள்ளார். பதவி தராததால் பனையூரில் தவெக அலுவலகம் முன்பு அஜிதா தன் ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டிருந்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. இந்த முறை புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய்யும் சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகியுள்ளார்.

தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி
இதற்காக கட்சி பணிகளை தீவிரமாக செய்து வரும் விஜய் ஏற்கனவே 120 மாவட்டச் செயலாளர்களை நியமித்து இருந்தார். இந்த நிலையில் தான் இன்று மீதமுள்ள தொகுதிகளுக்கான மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய இருப்பதாக நேற்றே தகவல் வெளியானது. இதன்படி இன்று தவெக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் முக்கியமாக கோஷ்டி பூசலால் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்த தூத்துக்குடி மாவட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவரை அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் வந்தது.
விஜய் காரை மறித்து
தனக்கு தான் பதவி கிடைக்கும் என்று ஆர்வத்தில் இருந்த தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா ஆக்னஸ் அதிர்ச்சியடைந்தார். "கட்சியில் உழைப்பவர்களுக்கே பதவி கொடுக்க வேண்டும்" என கோரி அவர், தனது ஆதரவாளர்களுடன் பனையூருக்கு இன்று காலையில் வந்து இருந்தார். ஆனால் அவரை உள்ளே விடாமல் பவுன்சர்கள் தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதனால் வெளியே நின்ற அவர் பனையூர் அலுவலகம் வந்த விஜய்யின் காரை வழிமறித்து தடுத்து நிறுத்தினார். ஆனால் விஜய் கதவை கூட திறக்காமல் பனையூர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையடுத்து பனையூர் அலுவலகம் முன் வாசலில் அமர்ந்து அஜிதா தன் ஆதரவாளர்களுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
உயிருள்ள கடைசி நொடி வரை
இதையடுத்து நிர்மல் குமார் அவரிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் விஜய் வந்து அழைக்க வேண்டும் என்று கூறி தொடந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவரை நியமனம் செய்து விஜய் அறிவிப்பு வெளியிட்டார். இன்று காலை 10 மணி முதல் தவெக தலைமை அலுவலகத்தின் வெளியே காத்திருந்த அஜிதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அஜிதா, உயிருள்ள கடைசி நொடி வரை விஜயுடன் மட்டுமே எங்களது பயணம் தொடரும் என்று கூறினார். இது குறித்து அவர் கூறியாதவது:-
தலைமை மீதும் தளபதி விஜய் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும். சீக்கிரமாக என்னை கூப்பிட்டு பரிசீலனை செய்வாங்க. என்றைக்கும் என்னுடைய பயணம் தமிழக வெற்றிக் கழகத்துடன் தான். உயிருள்ள கடைசி நொடி வரை விஜயுடன் மட்டுமே எங்களது பயணம் தொடரும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications