Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 ஆயிரம் தமிழ் பிராமண இளைஞர்களுக்கு தமிழகத்தில் மணப்பெண் கிடைக்கவில்லை! உபி, பீகாரில் தேடும் சங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு அவர்கள் ஜாதியில் பெண் கிடைக்காமல் கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், எனவே உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் உள்ள பிராமணப் பெண்களை மணம் முடிக்க அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (Thambraas) தலைவர் நாராயணன் இப்படி ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறார். பிராமணர் சங்கத்திற்காக மாதந்தோறும் தமிழ்மொழியில் ஒரு இதழ் வெளியாகி வருகிறது. நவம்பர் மாத இதழில் நாராயணன் இந்த முக்கிய தகவலை தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறியிருக்கும் தகவல் இதுதான்: தோராயமாக தமிழகத்திலுள்ள பிராமண இளைஞர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அதிலும் 30 முதல் 40 வயது ஆகிவிட்ட போதிலும் திருமணம் செய்துகொள்ள பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் கிடைக்கவில்லை. திருமணம் செய்யக் கூடிய வயதில் 10 பிராமண சமுதாயத்தை ஆண்கள் இருந்தால் திருமணம் செய்யக் கூடிய வயதில் 6 பிராமணப் பெண்கள் தான் இருக்கிறார்கள். எனவே இளைஞர்களுக்கு மணப்பெண்களை பெறுவதற்காக புதிய முயற்சிகளை கையில் எடுக்க வேண்டியதாக இருக்கிறது.

டெல்லி, பாட்னா

டெல்லி, பாட்னா

இதற்காக டெல்லி , உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோ, பீகார் மாநிலத் தலைநகர் பாட்னா ஆகிய நகரங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஹிந்தி மொழியில் படிக்க, எழுத, பேச தெரிந்த நபர்கள் சென்னையில் உள்ள நமது சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த பதவிகளில் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் வடமாநிலத்தில் இருந்து வரும் வரன்களை இங்குள்ள தமிழ் பிராமணர் குடும்பங்களுக்கு, கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார்.

மாறுபட்ட கருத்துக்கள்

மாறுபட்ட கருத்துக்கள்

இந்த முயற்சிக்கு கணிசமான பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்து இருந்தாலும் எதிர்ப்புகளும் கிளம்பாமல் இல்லை. கல்வியாளர் பரமேஸ்வரன் இதுபற்றி கூறுகையில், திருமண வயதில் போதிய பிராமணப் பெண்கள் இல்லாதது மட்டுமே பிராமண ஆண்கள் வேறு மாநிலங்களில் பெண் தேடுவதற்கு ஒரு காரணம் கிடையாது. நமது ஆண்கள் விமரிசையான திருமண விழாவை எதிர்பார்க்கிறார்கள். புகழ்பெற்ற திருமண மண்டபங்களில் வைத்து திருமணம் நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். வசதி குறைவான பிராமணப் பெண்களை திருமணம் செய்தால் இந்த ஆசைகள் நிறைவேறாது கோவில் அல்லது வீடுகளில் வைத்து திருமணத்தை முடித்தால் பல பிராமணப் பெண்களுக்கு விரைவாக திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

பெண் வீட்டார் செலவிடுகிறார்கள்

பெண் வீட்டார் செலவிடுகிறார்கள்

காஞ்சி மகா பெரியவா, எளிமையாக வாழ வேண்டும் என்று தான் உபதேசம் செய்து இருக்கிறார். பட்டு ஆடைகளை கூட உடுத்துவதை அவர் விரும்புவது இல்லை. ஆனால் பிராமண சமுதாயத்தை சேர்ந்த சிலர் ஆடம்பர திருமணங்களை விரும்புகிறார்கள். திருமண செலவு முழுவதையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இந்த சமுதாயத்தில் இருக்கக்கூடிய ஒரு நடைமுறையாக இருக்கிறது. இது மற்றொரு பெரிய சுமையாகும்.

எளிமை முக்கியம்

எளிமை முக்கியம்

விமரிசையாக நடைபெறும் திருமணங்களை, தங்கள் வசதி வாய்ப்புகளை தங்கள் கவுரவத்தை வெளியுலகத்திற்கு காட்டும் நிகழ்வுகளாக நினைக்கக் கூடியது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் நாம் திருத்திக் கொள்ள நிறைய இருக்கிறது. இந்த அவசர காலத்தில் கூட தமிழ் பிராமணர் வீட்டு திருமணங்கள் இரண்டு முதல் மூன்று நாட்கள் விழாவாக நடைபெறுகின்றன . திருமணத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய பல கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. திருமண மண்டபத்திற்கான செலவு, உணவு, பரிசுகள் உள்ளிட்ட செலவு என அனைத்தையும் எடுத்துப்பார்த்தால் மூன்று நாட்களில் 15 லட்சம் வரை செலவாகிறது. சந்தேகமில்லாமல் பெண் வீட்டாருக்கு, இது மிகப் பெரிய சுமையாகும். சிலர் தங்களது வாழ்நாள் முழுக்க சேர்த்து வைத்த பணத்தை இதற்காக செலவிடுகிறார்கள். சிலர் கடன் வாங்கி தங்கள் வாழ்நாள் முழுவதையும் அந்த கடனை அடைப்பதற்கு செலவிடுகிறார்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த அளவில்கூட, பல பிராமண குடும்பத்தினர் பணவசதி இல்லாமல் மகள்களுக்கு திருமணம் நடத்தி வைக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே மாப்பிள்ளை வீட்டார் தங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொண்டு வரன் தேட ஆரம்பித்தால் தமிழகத்திலேயே அவர்களுக்கு பெண் கிடைப்பார்கள். நமது ரிஷிகளும், முனிவர்களும், வேத நூல்களும் சொல்வதை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமென்றால், இந்த எளிமை மனநிலைக்கு அவர்கள் செல்ல வேண்டும். இவ்வாறு பரமேஸ்வரன் தெரிவித்தார்.

தெலுங்கு, கன்னட பிராமணர்களுடன் திருமண உறவு

தெலுங்கு, கன்னட பிராமணர்களுடன் திருமண உறவு

மணப்பெண் தேடி வரும் அஜய் என்ற பிராமண வாலிபர் இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் பிராமணர் குடும்பங்களுக்கு இடையே திருமண உறவு ஏற்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கன்னடம் பேசும் மத்வா பிரிவினர், தமிழ்பேசும் ஸ்மார்த்தா குடும்பங்களுக்கு இடையேயும் திருமண உறவுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இதெல்லாம் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. ஏற்கனவே தமிழ் பிராமண குடும்பத்தினர் வட இந்தியாவைச் சேர்ந்த பிராமணப் பெண்களை திருமணம் செய்து கொண்ட நிகழ்வுகளையும் நாங்கள் பார்த்து விட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்வா பிராமணர்கள் வைணவர்களாகும். ஸ்ரீ மத்வாச்சாரியாரை பின்பற்றக் கூடியவர்கள். ஸ்மார்த்த பிராமணர்கள், ஐயர்கள் என்று தமிழகத்தில் அழைக்கப்படுகிறார்கள். ஆதி சங்கரரை பின்பற்றக்கூடிய இவர்கள், இறைவனை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வழிபடலாம் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். இன்னொரு வைஷ்ணவ பிராமணர் இதுபற்றி கூறுகையில், சில வருடங்கள் முன்பு வரை தென்கலை மற்றும் வட கலை பிரிவினரிடையே ஐயங்கார் சமுதாயத்தில் திருமண உறவுகள் நடைபெற்றது கிடையாது. ஆனால் இப்போது அது நடைபெறுகிறது. எனவே பிராமண சங்கத்தின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+