தொடர் ஊரடங்கு.. "பொங்கி எழுந்து" தமிழகத்திலேயே சாதனை செய்த கோவை மாவட்டம்.. ஹேப்பி டேட்டா!
சென்னை: தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டோரின் எண்ணிக்கை 62 சதவீதமாக உள்ள நிலையில் 87.6 சதவீதத்துடன் கோயமுத்தூர் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இத்தோடு முடிந்து விட வில்லை. 3ஆவது அலையின் தொடக்கத்தில் உள்ள தமிழகத்தில் அது அக்டோபர் இறுதியிலோ அல்லது நவம்பரிலோ உச்சத்தை அடையும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த அலை தடுப்பூசி போடாதவர்களை அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். எனவே நவம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கி விடுகின்றன.

மெகா தடுப்பூசி முகாம்
அதன்படி தமிழகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்கள் அரசு நடத்தி வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மால்கள், பஸ் நிலையம், ரயில் நிலையம், முக்கிய சந்திப்புகள், அபார்ட்மென்ட்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் 25 லட்சத்திற்கு அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள்.
|
இலக்கு முறியடிப்பு
அரசும் இலக்கை நிர்ணயித்து அந்த இலக்கை முறியடித்து சாதனை செய்கிறது. அந்த அளவுக்கு தடுப்பூசி மீது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தனியார் டேட்டா ஆய்வாளர் விஜய் ஆனந்த், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த டேட்டாக்களை வெளியிட்டுள்ளார். அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் டோஸ் போட்டவர்களில் தமிழகத்தில் 62 சதவீதமாக உள்ளனர்.

முதல் இடம்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் டோஸ் போட்டவர்களின் எண்ணிக்கை 62 சதவீதமாக உள்ளது. அது போல் இரு டோஸ்களையும் போட்டவர்களின் எண்ணிக்கை 21 சதவீதமாக உள்ளது. இதில் முதல் டோஸ் போட்ட மாவட்டங்களில் 87.6 சதவீதத்துடன் கோவை மாவட்டம் முதலிடத்தை வகிக்கிறது.

காஞ்சிபுரம்
அடுத்த இடத்தில் முதல் டோஸ் போட்டவர்கள் 79.6 சதவீதத்துடன் காஞ்சிபுரமும், 78.4 சதவீதத்துடன் நீலகிரியும், 74. 9 சதவீதத்துடன் திருப்பூரும், 73.1 சதவீதத்துடன் சென்னையும் உள்ளது. கோவையில் 25.63 லட்சம் பேரும், காஞ்சிபுரத்தில் 6.06 லட்சம் பேரும், நீலகிரியில் 4.84 லட்சம் பேரும், திருப்பூரில் 15.55 லட்சம் பேரும், சென்னையில் 42.47 லட்சம் பேரும் முதல் டோஸை போட்டுக் கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர்
அது போல் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் குறைவாக உள்ள மாவட்டம் மயிலாடுதுறையாகும். இங்கு 49.2 சதவீதம் பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர். இதையடுத்து நெல்லையில் 49.5 சதவீதம் பேரும், திருப்பத்தூரில் 50.4 சதவீதம் பேரும், விழுப்புரத்தில் 51.1 சதவீதம் பேரும் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications