விதியும் இல்லை விதிவிலக்கும் இல்லை.. சிவகங்கை தொகுதி வேட்பாளர் தாமதம் குறித்து ப.சி. விளக்கம்
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தாமதத்திற்கு என்ன காரணம் என்று தற்போது முன்னாள் மத்திய அமைச்சரும், சிவகங்கை தொகுதியின் வேட்பாளரின் தந்தையுமான ப.சிதம்பரம் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஆனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. முதலில் காங்கிரஸ் தலைவருக்கோ அல்லது செயல் தலைவர்களுக்கோ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப் படாது என்று கூறப்பட்டது. பின்னர் மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்களுக்கு சீட் வழங்கப்படாது என்று கூறினார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் முடிவு செய்துள்ளார் ஆகவே அந்த அடிப்படையில்தான் சிவகங்கைக்கு வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஆகிறது என்று கூறினார்.

இதற்கிடையில் பல்வேறு ஹேஷ்யங்கள் கிளம்பின. ப.சி குடும்பத்தை ராகுல் காயவிட்டுவிட்டார் அதனால்தான் சிவகங்கை தொகுதிக்கு இன்னமும் வேட்பாளர் அறிவிப்பு வராமல் இருக்கிறது என்று கூறப்பட்டது. வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஆனதால் காங்கிரஸ் தொண்டர்களிடையே கூட ஒருவித சோர்வு ஏற்பட்டது. பின்னர் மிக நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தின் நள்ளிரவில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி தான் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த இழுபறிக்கு பின்னால் அந்த தொகுதியில் இதற்கு முன்னர் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் இருந்த சுதர்சன நாச்சியப்பன் ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது. கார்த்தி சிதம்பரம்தான் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதன் பின்னர் ப.சிதம்பரம் காங்கிரஸ் தலைமைக்கு கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சிதம்பரத்திடம் ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவருக்குத்தான் போட்டியிட வாய்ப்பு என்ற விதி உங்களுக்காகத்தான் தளர்த்தப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த சிதம்பரம் விதியும் இல்லை விலக்கும் இல்லை. சிவகங்கை தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஆனதற்கு சில காரணங்கள் இருந்தன. அதாவது ராகுல்காந்தி அமேதி தொகுதியோடு தென் மாநிலங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு ஆகிய இந்த மூன்று மாநிலங்களிலும் ஒரு தொகுதி தேர்வு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் கேரளாவில் வயநாடு தேர்வு செய்யப்பட்டது, தமிழ்நாட்டில் சிவகங்கை தேர்வு செய்யப்பட்டது. இதுதான் வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஆனதற்கு காரணம் என்று கூறினார்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் போட்டியிட வாய்ப்பு என்ற விதி இல்லை என்றவர் அதற்கும் சில உதாரணங்களை குறிப்பிட்டு பேசினார். மத்தியப்பிரதேச முதல்வரின் மகன் சிந்துவாரா தொகுதியில் போட்டியிடுகிறார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. இப்படி உதாரணங்களை கூறியவர் ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவருக்குதான் வாய்ப்பு என்ற விதியும் இல்லை, விதி விலக்கும் இல்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications