காங்கிரஸ் தேர்தல் இருக்கட்டும்.. நட்டா எப்போ வேட்புமனு தாக்கல் செய்தார்? பாஜவை கலாய்த்த ப.சிதம்பரம்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் பாஜக குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கல், வேட்பாளர்கள் பெயர்கள், வாக்காளர்கள் பெயர்கள் ஆகியவை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் ஜனநாயகம் குறித்து சிதம்பரம் பெருமை தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் பாஜகவின் உட்கட்சி ஜனநாயகம் குறித்தும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் எழுதியுள்ள பதிவு பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஜனநாயகம்
இந்தியாவில் உள்ள அரசியல் ஜனநாயகம் உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது என பலர் கூறி வந்த நிலையில் தற்போது இந்த ஜனநாயகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து எல்லாவற்றிலும் ஒற்றை தன்மை புகுத்தப்படுவதாக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

வெளிப்படை
இது பாஜகவின் அரசியல் செயல்பாடுகளில் மட்டுமல்லாது, அதன் உட்கட்சி நடைமுறைகளிலும் பிரதிபலிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. முதன் முறையாக 'காந்தி' குடும்பத்தினர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்வாக இருக்கிறார். இந்த தேர்தலில் போட்டியாளர்கள், வாக்காளர்கள் என அனைத்தும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

ட்வீட்
போட்டியாளர்களுக்கு நாடு முழுவதும் உள்ள கட்சியின் வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் பாஜகவின் உட்கட்சி ஜனநாயகம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் பொதுமக்களிடமும், ஊடகங்களிடமும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நல்ல அம்சமாகும்." என்று கூறியுள்ளார்.

கலாய்
மேலும் கடந்த 2020ல் பாஜக தலைவராக நட்டா அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், நட்டா 'மக்கள்' ஆதரவு மூலம் தலைவராக தேர்வாகியுள்ளார் என்று கிண்டலாக கூறியுள்ளார். மேலும் "நட்டா எப்போது வேட்புமனு தாக்கல் செய்தார், எந்த தேர்தல் ஆணையம் முன்பு தாக்கல் செய்தார் என்பதை அறிய முயன்று வருகிறேன்" என்றும் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் தற்போது போட்டியாக நடைபெறும் நிலையில், இது போன்ற முறையை கம்யூனிஸ்ட் கட்சிகளில் காலம் காலமாக பின்பற்றி வருகின்றன. ஆனால் பாஜகவில் தலைவர் பதவிக்கான தேர்வு நியமன முறையிலேயே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications