சொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..!
சென்னை: சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு சம உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு பிரபல பெண் தொழிலதிபரும், நல்லி குப்புசாமி செட்டியார் மகளுமான ஜெயஸ்ரீ ரவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பெண் உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை புதிய மைல் கல்லாக பார்க்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்தறிவதற்காக ஒன் இந்தியா தமிழ் சார்பில் ஜெயஸ்ரீ ரவியை தொடர்பு கொண்டுபேசிய போது அவர் இதனைக் கூறினார்.
மேலும், அவர் கூறிய விவரம் பின்வருமாறு;

வரவேற்கிறேன்
''பெண்களுக்கும் சொத்துக்களில் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. இதனை நான் வரவேற்கிறேன். இது போன்ற லேண்ட்மார்க் ஜட்ஜ்மெண்ட் வரும்போது இரண்டு நாட்களுக்கு மட்டும் பரபரப்பாக பேசிவிட்டு பின்னர் அதைப்பற்றி மறந்துவிடக்கூடாது என்பது எனது கருத்து. இந்த தீர்ப்பு குறித்த விவரம் பாமர மக்களை, கிராமப்புற பெண்களை சென்றடைய வேண்டும்''.

கிராமப்புறங்களில்
''ஏனென்றால் அறியாமையால் கிராமப்புறங்களில் எத்தனையோ பெண்கள் தங்கள் உரிமையை பறிகொடுத்து சொத்துக்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு எல்லாம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனம் விரும்பி தனக்கு சேர வேண்டிய சொத்தை தனது சகோதரருக்கு ஒரு பெண் விட்டுக்கொடுத்தால் அதைப் பற்றி பேசுவதற்கில்லை. அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அபகரிக்கப்படக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு. அறியாமையால் பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என நினைக்கிறேன்''.

காலதாமதம் கூடாது
''விரும்பித்தருவது வேறு; ஏமாளியாக இருந்து ஏமாறுவது வேறு; இவை இரண்டையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னைக் கேட்டால் பெற்றோரே பிள்ளைகளுக்கு சொத்துக்களை பிரித்துக்கொடுத்துவிட்டால் குடும்ப உறவுகள் உள்ளிட்ட எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு சிலர் எப்படி செய்வது எனத் தயங்கி காலம் கடத்துவதால் தான் பல பிரச்சனைகளும் உருவாகின்றன. பிராக்டிகலாக சிந்தித்து செயல்பட வேண்டும்.''

பாரபட்சமின்றி உரிமை
''பெற்றோரும் சிறுவயதில் இருந்தே குழந்தைகளை வளர்க்கும் போது ஆண்குழந்தை, பெண் குழந்தை என பாரபட்சம் காட்டாமல் சரிசமமாக நடத்த வேண்டும். அப்போது தான் பிற்காலத்தில் அது சொத்து விவகாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. எங்கள் இல்லத்தை பொறுத்தவரை அப்பா எல்லோருக்கு சம உரிமை தரக்கூடியவர். பெண் என்பதற்காக எந்த பாரபட்சமும் காட்டியதில்லை. நான் தனியாக பாலம் சில்க்ஸ் என்ற பெயரில் கடை தொடங்குவதாக கூறிய போது கூட, உன்னால் முடியும் என நம்பிக்கை இருந்தால் தாராளமாக தொடங்கு என ஆசிர்வதித்தார். அதன் காரணமாகவே இன்று நான் ஒரு தொழிலதிபராக இருக்கிறேன்''.












Click it and Unblock the Notifications