பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு..ஆகம விதிப்படி தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்..சேகர்பாபு உறுதி
சென்னை: பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ஆகம விதிகளுக்கு உட்பட்டு குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சேகர்பாபு கூறியுள்ளார். பழனி முருகன் கோயிலில் இருந்து இடும்பன் கோயில் வரை ரோப்கார் திட்டம் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி தண்டாயுதபாணி ஆலயம். இந்த கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற உள்ளது. 27 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில் 23ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளன.
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவில் மந்திரங்களை தமிழில் ஓத நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். தெய்வ தமிழ் பேரவை அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் இன்று பழனியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சம்ஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விவகாரத்திலும், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு விவகாரத்திலும், தமிழில் குடமுழுக்கு முறையாக நடத்தப்படவில்லை.
இச்சூழலில், தமிழ் கடவுள் பழநி முருகன் கோயில் குடமுழுக்கு வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் தமிழ் இராசேந்தின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பழநி முருகன் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக்கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்களும், சம்ஸ்கிருத மந்திரங்களும் சம அளவில் அர்ச்சிக்கப்படும் என்பதை பொத்தாம் பொதுவாக கூறாமல், அறிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று பழனி வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குடமுழுக்கு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, பழனி முருகன் கோவிலில் 88 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் திருக்கோவில் நிதியின் மூலம் 26 பணிகளும், உபயதாரர்கள் மூலம் 62 பணிகளும் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த பணிகள் முழுமை பெற்று பக்தர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் வரும் ஜனவரி 27-ந்தேதி கோவில் குடமுழுக்கு விழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்படும் என்றும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.