2வது கல்யாணம் பற்றி பேசிய பாண்டியா? விவகாரத்து பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! ஏன்? எப்போது?
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது காதல் மனைவியை விட்டு பிரிய முடிவு செய்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு முன்னதாக திருமண உறவை விட்டு வெளியேறிய கிரிக்கெட் வீரர்கள் யார்? என்ன காரணம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு அறிமுகம் தேவையில்லை. 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வரலாறு காணாத சாதனையைச் செய்தது. அந்த வரலாற்று வெற்றியை அணி பெற்றபோது அணியின் துணைத்தலைவராக பாண்ட்யாதான் இருந்தார் என்பது இன்னும் 100 ஆண்டுகளானாலும் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். இந்திய அணியில் இவர் ஒரு ஆல்ரண்டர். பந்துகளை ஃபாஸ்ட் மீடியமில் வலது கையில் வீசக்கூடிய ஆற்றல் பெற்றவர். மிடில் ஆடரில் வலது கையால் பேட்டிங் செய்யக்கூடியவர். ஐபிஎஸ் போட்டியில் மும்பை இண்டியன் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.

இவரை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் 10 மில்லியனுக்கு மேல் பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் இவரை 34.4 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். ஹர்திக் ஆட்டைத்தை தாண்டி அவரது நடை, உடை, பாவனைக்காகவே அதிகம் ரசிக்கப்படுகிறார். இந்திய அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் மிகவும் ஸ்டைலானவர் பாண்ட்யா.
கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தின் போதுதான் தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பாண்ட்யா அறிவித்திருந்தார். அந்தச் செய்தி வெளியாக ஒரு வருடம் கடந்துள்ள நிலை இப்போது தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், " கடந்த 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, நடாசாவும் நானும் பரஸ்பரமாகப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். எங்களால் இயன்றதை ஒன்றாக இருந்து முயன்றோம். எங்களால் முடிந்த அனைத்தையும் அளித்தோம்.
இந்த முடிவு எங்கள் இருவருக்கும் சிறந்த நன்மை தரும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஒன்றாக இருந்தபோது அனுபவித்த மகிழ்ச்சி, பரஸ்பர மரியாதை,தோழமை ஆகியவை அப்படியே இருக்கும். நாங்கள் ஒரு குடும்பமாக வளர்ந்துவிட்டோம். நாங்கள் எடுத்துள்ளது ஒரு கடினமான முடிவு" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், "அகஸ்தியாவினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். எனது மகன் இருவரின் வாழ்க்கையின் நடுவே தொடர்ந்து இருப்பான். மேலும் அவனுடைய மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் அவனுக்குக் கொடுப்போம். அதற்கு உறுதிசெய்ய நாங்கள் ஒத்துழைப்போம். இந்த கடினமான தருணத்தில் எங்களின் தனிப்பட்ட உரிமை நீங்கள் வழங்க வேண்டும். அதற்காக உங்கள் ஆதரவை நாங்கள் உண்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்" என்று உருக்கமாக எழுதி இருக்கிறார்.
இவரது மகன் அகஸ்தியாவின் பிறந்தநாள் கடந்த ஜூலை 5 ஆம் தேதிதான் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது பாண்ட்யா, "என் நம்பர் 1 இவன். எதை வேண்டுமானாலும் செய்வேன். நான் உனக்காகச் செய்வேன்" என்று சொல்லி இருந்தார். கடந்த மாதம் மகனின் பிறந்தநாள். இந்த மாதம் மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார் பாண்ட்யா. ஹர்திக் பாண்ட்யாவுக்கும் செர்பியாவை சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக் ஆகிய இருவருக்கும் 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்தது. மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டு ஜூலையில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த ஜோடிக்கு திருமணம் நடந்த போது நாடு முழுக்க கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. ஆகவே யாரையும் அழைக்காமல் சிம்பிள் ஆக திருமணம் நடந்தது. அதைச் சமன் செய்யவே 2வது முறை தனது கல்யாணத்தை ஊரறிய செய்ய உள்ளதாக பாண்ட்யா தெரிவித்திருந்தார். கல்யாண சாப்பாடு போடுவார் எனப் பார்த்த வேளையில் பிரிவை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பாண்ட்யாவை தொடர்ந்து இதற்கு முன்னதாக மனைவியை விட்டுப் பிரிந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார்? அந்த ஜோடிகளின் பெயர் என்ன? என ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2018 ஆம் ஆண்டு தனது மனைவி ஹசின் ஜஹானை விட்டுப் பிரிந்தார். அது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியது.

அடுத்து ஷிகர் தவான், ஒன்பது ஆண்டுகள் இல்லற வாழ்க்கைக்குப் பிறகு ஆஷா முகர்ஜிவிட்டு பிரிந்தார். அக்டோபர் 2023ஆம் ஆண்டு தவானுக்கு டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இவருக்கு முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தனது மனைவி நிகிதா வஞ்சாராவை 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
'மைசூர் எக்ஸ்பிரஸ்' ஜவகல் ஸ்ரீநாத் 1999 இல் ஜோத்சனாவை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதி 2007 இல் இணக்கமாகப் பிரிந்து செல்ல முடிவு எடுத்தனர். விவாகரத்து நடந்து ஒரு வருடம் கழித்து, ஸ்ரீநாத் பத்திரிகையாளர் மாதவி பத்ராவலியை மணம் புரிந்து கொண்டார். அதே மாதிரி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது குழந்தை பருவ தோழி நோயெலா லூயிஸை 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் தனிப்பட்ட காரணங்களால் அவரை விவாகரத்து செய்தார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், நடிகை சங்கீதா பிஜ்லானியை திருமணம் செய்வதற்காக நவ்ரீனை 1996ல் விவாகரத்து செய்தார். இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு, அசார் பிஜ்லானியையும் விவாகரத்து செய்தார்.












Click it and Unblock the Notifications