சென்னை விமானத்தை பிடிக்க முடியவில்லை.. கோபத்தில் பயணி செய்த வேலையை பாருங்க.. பரபரத்த அதிகாரிகள்
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை: ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் வர இருந்த 59-வயதான பயணி தாமதமாக வந்ததால் விமானத்தில் செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால், விமான நிலைய அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அந்த பயணி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த விமானத்திற்கு கடந்த திங்கள் கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
விமான நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவன் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டியுள்ளான். இதனால், பதறிப்போன அதிகாரிகள் உடனடியாக சென்னை புறப்பட இருந்த விமானத்திற்கு தகவல் கொடுத்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்
விரைந்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கி விட்டனர். தொடர்ந்து விமானம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது. சோதானையில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபர் குறித்த விவரங்களை போலீசார் திரட்ட தொடங்கினர். தொலைபேசி எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபர் இருக்கும் இடம் பற்றிய விவரங்களை போலீசார் கண்டறிந்தனர்.

உரிய நேரத்தில் வர முடியவில்லை
உடனடியாக சென்று அந்த நபரை பிடித்து வெடி குண்டு மிரட்டல் விடுத்தது ஏன் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஐதரபாத்தில் இருந்து சென்னைக்கு வர இருந்த அதே விமானத்தில் அந்த நபரும் டிக்கெட் புக் செய்து இருந்தாராம். ஆனால், விமான நிலையத்திற்கு உரிய நேரத்தில் அந்த நபரால் வர முடியவில்லை. தாமதமாக வந்ததால் விமான நிலைய அதிகாரிகளும் விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த அந்த பயணி விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசிடம் சொல்லியிருக்கிறார்.

பயணிகள் சிரமம்
59-வயதான அந்த பயணியை போலீசார் கைது செய்தனர். விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவத்தால் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்புக்கு உள்ளானது. சென்னைக்கு வர இருந்த விமானத்தில் இருந்த பயணிகள் வெடிகுண்டு சோதனைக்காக இறக்கிவிடப்பட்டதால் பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டது
முன்னதாக நேற்று மும்பையில் இருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 6E-2051 விமானத்திலும் வெடி குண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டது. விமான நிலையத்தில் போதிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.












Click it and Unblock the Notifications