கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கிடைக்குமா.. அமைச்சர் சேகர்பாபு தந்த அதிரடி விளக்கம்
சென்னை: கோயில் இடங்களை பொறுத்தளவில் மன்னர் காலத்தில் மன்னர்கள், தொழிலதிபர்கள், ஜமீன்தார்கள் இனாமாக கொடுத்த இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இறைவன் சொத்து இறைவனுக்கே என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருச்சியில் பல்வேறு கோயில்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் , நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் சிவராசு உள்ளிட்டோர் ஆய்வு பணியில் பங்கேற்றனர்.
அமைச்சர் சேகர்பாபு ஆய்வின் போது திருச்சி திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆய்வு செய்தவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள யானை அகிலாவின் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.

கோயில் சொத்துக்கள்
பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது : இந்து சமய அறநிலையத்துறையில் ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். . இறைவன் சொத்து இறைவனுக்கே' என்கிற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கோயில் சொத்துக்கள் மீட்கப்படும். இதுவரை சுமார் 180 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது.

புதிய சட்டம்
கோயில் நிலங்களை மீட்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய சட்டதிட்டங்களை கொண்டு வந்துள்ளார். கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு பற்றி புகார் கொடுக்கலாம். அறங்காவலர் குழு நியமனத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம். அறங்காவலர் குழு பதவி காலம் 3 ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளாக மாற்றி உள்ளோம்.

பட்டா தரமுடியாது
கோயில் இடங்களை பொறுத்தளவில் மன்னர் காலத்தில் மன்னர்கள், தொழிலதிபர்கள், ஜமீன்தார்கள் இனாமாக கொடுத்த இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுப்பது நடைமுறையில் சாத்தியமில்லை" இவ்வாறு கூறினார்.

கோவில் நிலம்
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில், கோவில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட வேண்டுமென அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் அதிரடி
மேலும், கோவில் நிலங்களை அபகரிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், கோவில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும், அந்த சிறப்பு பிரிவின் தொலைபேசி எண், மொபைல் எண்களை அனைத்து கோவில்கள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களில் பக்தர்கள் புகார் அளிக்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications