கடலுக்குள் பேனா நினைவிடம் அமைப்பது எப்போது? தடைக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு!
மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவாக சென்னை கடலுக்குள் பேனா நினைவிடம் அமைக்க தடைக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பசுமை தீர்ப்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை: சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தீர்ப்பாயம் உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகே பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் தான் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடலுக்குள் 8,551.13 சதுர மீட்டரில் 42 மீட்டர் உயரத்துக்கு கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

தடைக்கோரி மனு
இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைத்தால் மீன்வளம் பாதிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படும். இதற்கு தடை விதிக்க வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்தன் என்பவர் டிசம்பர் மாதம் மனு செய்திருந்தார். அதில் கடல் வாழ் உயிரினங்களில் இனப்பெருக்கத்துக்கு தடையாக இருக்கும் என்பதால் பேனா நினைவிடம் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

அரசு தரப்பு வாதம்
இந்த மனு தீர்ப்பாய அமர்வின் நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ‛‛பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த வகையான அனுமதியும் பெறவில்லை. திட்டத்தின் ஆவணப் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது'' என வாதம் செய்யப்பட்டது.

விசாரணைக்கு ஏற்றதல்ல
அதோடு ‛‛முதல்கட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு ஆய்வறிக்கை அனுப்பப்படும். இதன் அடிப்படையில் மட்டுமே நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்கப்படும். எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல" என்று வாதிட்டார்.

தமிழக அரசு பதில் மனு
இதையடுத்து தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாடு அரசு சார்பில் பொதுப்பணித்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‛‛அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பிறகே பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி துவங்கப்படும். அதற்கு முன்பு எந்த பணிகளும் துவங்கப்படாது'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications