"கடந்த 10 ஆண்டுகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவில்லை" அமைச்சர் மா சுப்பிரமணியன்!
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தில் மிதப்பதற்கு பதில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனை வெளியேற்ற அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு வெள்ள தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை பாதிப்புக்குள்ளான இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். அதேபோல் மழை காலங்களில் மக்கள் நோய் பாதிப்பில்லாமல் இருக்க சென்னை மாநகர் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.

மருத்துவ முகாம் தொடக்கம்
அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கேஎன் நேரு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மா சுப்பிரமணியன் பேட்டி
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும். கடந்த 4 நாட்களில் சென்னையில் மிக கனமழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு சிறிய மழைக்கு, பெரும் பாதிப்புகளை சந்திக்க நேர்ந்தது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்கு பயணித்து மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்
இதனால் சென்னையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக செய்ய வேண்டிய மழைநீர் வடிகால் பணிகளை 6 முதல் 7 மாதத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதில் 90 சதவிகித பணிகளை முடித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் குறைகளை சொல்ல மக்கள் அதிகாரிகளிடம் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு நன்றி சொல்ல வருகிறார்கள். அந்த அளவிற்கு மழைநீர் வடிகால் பணிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மழை வெள்ளத்தில் மிதப்பதற்கு பதில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள்.

அதிமுக ஆட்சி
இதுமட்டுமல்லாமல் சென்னை 200 வார்டுகளில் 200 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் பெரியளவில் நடத்தப்படவில்லை. மழை வந்த பின் பல்வேறு உடல் உபாதைகள் மக்களுக்கு ஏற்படும். அதற்கேற்ப மாநகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற உள்ளனர் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications