கூட்டமோ கூட்டம்.. கொத்தாக கொரோனா பரப்பும் இடமாக மாறும் வேக்சின் மையங்கள்! அரசு நடவடிக்கை அவசியம்
சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் நிலையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது.
நேற்று முன்தினம் 3.23 லட்சம் பேர் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் நேற்று 3.09 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். இவர்களில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம்.
தடுப்பூசி போட தொடங்கும்போது மக்கள் மத்தியில் காணப்பட்ட தயக்கம் இப்போது இல்லை. பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருக்கின்றனர். தடுப்பூசி பற்றாக்குறை மட்டுமே இப்போதுள்ள ஒரே பிரச்சினையாக உள்ளது.

தடுப்பூசிகள் இருப்பு நிலவரம்
தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 84 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1 கோடியே 82 லட்சத்து 26 ஆயிரத்து 401 தடுப்பூசிகள் கைவசம் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று கூறியுள்ளது. இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், 4 லட்சத்து 86 ஆயிரத்து 180 தடுப்பூசிகள் தயாராகி வருவதாகவும் அடுத்த மூன்று நாட்களுக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் அவை அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் ஆர்வம்
இதனிடையே 3வது அலை குறித்த அச்சத்தாலும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு இயல்பாகவே இருக்கும் உடல்நலம் சார்ந்த அதிக தைரிய மனநிலை காரணமாகவும், இந்த வயதினர் தடுப்பூசி போட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு நகரத்திலும் தடுப்பூசி போடும் இடங்களில் குறைந்தது ஆயிரம் பேராவது ஒரே நேரத்தில் கூடி விடுகிறார்கள்.

சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம்
இப்படி கூட்டம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி சுத்தமாக இல்லை. மதுரை, கோவை, சென்னை, நெல்லை என பல நகரங்களிலும் இப்படியான நிலைமையை பார்க்க முடிகிறது. கிராமங்களிலும் தடுப்பூசி மையங்களுக்கு இப்போதெல்லாம் கூட்டம் அதிகரிக்கிறது. எனவே, கொரோனா பரவும் இடமாக தடுப்பூசி மையங்கள் மாறிவிட கூடாது என்ற அச்சம் எழுந்துள்ளது. சமூக இடைவெளி விட்டு நின்று கொள்ள நமது மனநிலை இடம் தருவது இல்லை. குறுக்கே யாராவது புகுந்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில், ஒட்டிக் கொண்டுதான் நிற்கிறார்கள் மக்கள். இப்படி நிற்கும்போது கொரோனா பரவினால் தடுப்பூசி போட்டும் பலன் கிடைக்காதே.

முன்னெச்சரிக்கை
இதற்கு சில விஷயங்களை அரசு முன்னெடுக்கலாம். தடுப்பூசி வழங்குதற்கு இணையவழியில் முன்பதிவுசெய்வதை கட்டாயமாக்கலாம். இப்போது நேரடியாக போய் ஆதார் அட்டையை காண்பித்து ஊசி போடும் நடைமுறையை தமிழகத்தில் ஃபாலோ செய்து வருகிறோம். எனவேதான் ஒரே நேரத்தில் கூட்டம் அதிகரிக்கிறது.

கொரோனா பரவக் கூடாது
இப்படி செய்தால், அதிகம் பேருக்கு தடுப்பூசி போட முடியாது. பலருக்கும் இணையத்தில் பதிவு செய்ய தெரியாது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. எனவே, தனியார் தொழில் நிறுவனங்கள் மூலமாக அவர்கள் கம்பெனிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யலாம். இதனால் கூட்டம் ஒரே இடத்தில் கூடுவது தவிர்க்கப்படும். இரண்டையுமே செய்ய முடியாதா. குறைந்தபட்சம், தடுப்பூசி முகாம்களில் டோக்கன் கொடுக்கலாம். வீட்டுக்கு போய் விட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு வரச் சொல்லலாம். காவலாளிகளை பயன்படுத்தி கண்டிப்பாக 6 அடி இடைவெளி விட்டு மக்கள் நிற்கவாவது ஏற்பாடு செய்யலாம். அரசு இதில் கவனம் வைக்க வேண்டியது அவசியம்.












Click it and Unblock the Notifications