கோட்டையை நோக்கி தவெக! விஜய் அரசியலுக்கு வந்தது இதற்காகத்தான்! தந்தை எஸ்ஏ சந்திரசேகர் உருக்கம்
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஜய் தலைமையிலான "தமிழக வெற்றி கழகம் (தவெக)" தனித்துப் போட்டியிட்டு முன்னிலை வகித்து வருவது அரசியல் வரலாற்றில் பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. கூட்டணி இல்லாமல் நேரடியாக களமிறங்கிய இந்த முடிவு ஒரு ரிஸ்க் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதே முடிவு அவருக்கு மிகப்பெரிய பலனாக மாறியுள்ளது.

எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி
இந்த வரலாற்று தருணத்தில், விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன் தனது மகனின் அரசியல் பயணத்தை பற்றி பேசியுள்ளார். "கடந்த 30 வருடங்களாகவே தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு விஜய் மனசுக்குள் ஒரு எண்ணம் இருந்தது. அது மெதுவாக வளர்ந்து இன்று அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது," என்று அவர் கூறியுள்ளார். மேலும், "ஒரு கலைஞன் கலைக்கு மட்டும் அல்ல, சமூகத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு எப்போதுமே இருந்தது" எனவும் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கனவு
விஜய் 2024-ல் கட்சி தொடங்கியதிலிருந்து, 'நான் முதலமைச்சராக வருவேன்' என்ற நம்பிக்கையை விடாமல் வைத்திருந்தார் என்றும், அந்த தைரியம் மற்றும் உறுதியே இன்று இந்த வெற்றிக்கு காரணம் என்றும் எஸ்.ஏ.சி குறிப்பிட்டுள்ளார். "யாருடனும் கூட்டணி இல்லாமல் தனியாக நிற்பேன் என்ற அவரது முடிவு, ஒரு தலைவரின் தைரியத்தை காட்டுகிறது. இது ஒரு சரித்திர வெற்றி," என்று அவர் கூறியிருக்கிறார்.
அப்பா உருக்கம்
மேலும், பொதுமக்களுடன் விஜய் உருவாக்கிய உறவுதான் இந்த வெற்றியின் மிகப்பெரிய பலம் எனவும் அவர் கூறியுள்ளார். "தமிழ் மக்கள் அவரை ஒரு நடிகராக மட்டும் பார்க்கவில்லை. வீட்டு மகனாக, சகோதரராக, பேரனாகவே பார்க்கிறார்கள். அந்த உணர்ச்சி பந்தமே இன்று வாக்குகளாக மாறியுள்ளது," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விஜய் வீட்டில் கொண்டாட்டம்
இந்நிலையில், விஜய்யின் குடும்பத்திலும் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. அவரது தாய் ஷோபா சந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். வீட்டில் விசில் அடித்து கொண்டாடியதோடு, "ஏழைங்க பாலைங்க நெனச்சுப்புட்டா நாளைக்கு நீங்களும் சிஎம் தான்" என்ற விஜய்யின் பாடலை பாடி கொண்டாட்டத்தை உற்சாகமாக மாற்றியுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் ஆரம்பகாலம்
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, 1992-ல் கதாநாயகனாக அறிமுகமாகி, இன்று அரசியல் தலைவராக உயர்ந்திருக்கும் விஜய்யின் பயணம் பலருக்கும் ஊக்கமாக உள்ளது. "நான் அவனை அறிமுகப்படுத்தியது ஒரு அப்பாவாக என் கடமை. ஆனால் இந்த உயரத்தை அவர் தனது உழைப்பாலும் ஒழுக்கத்தாலும் தான் அடைந்தார்" என்று எஸ்.ஏ.சி பெருமையுடன் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு நிமிடமும் திருப்பம் எடுத்து வரும் நிலையில், அரசியல் வட்டாரங்களும், ரசிகர்களும் இறுதி முடிவுகளை ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒரு பக்கம் வாக்கு எண்ணிக்கை பரபரப்பு, மற்றொரு பக்கம் குடும்ப கொண்டாட்டம்-இவை இரண்டும் சேர்ந்து தமிழகத்தில் இதுவரை காணாத ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
மொத்தத்தில், 30 வருட கனவு நனவாகும் தருணத்திற்கு விஜய் மிக அருகில் உள்ளார் என்ற உணர்வு, அவரது குடும்பத்திலும், ரசிகர்களிடையிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் உணர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை இந்த பரபரப்பு இன்னும் அதிகரிக்கும் என்பது உறுதி.












Click it and Unblock the Notifications