மக்களே.. 2வது அலை இன்னும் முடியலை... கடைகள் திறந்தாலும்.. உங்க உயிர் உங்க கையில்தான்!
சென்னை: தமிழகத்தில் ஒரு வார காலத்திற்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.
இந்த நேரத்தில் மக்களிடையே ஒரு விதமான "அப்பாடா தளர்வு அறிவிச்சுட்டாங்க" என்ற இயல்பு உணர்வு திரும்பியுள்ளதாக தெரிகிறது. இங்குதான் நாம் கவனமாக இருக்க வேண்டும்
தமிழகத்தில் 15-வது நாளாக குறைந்த கொரோனா.. 21,410 பேருக்கு பாதிப்பு.. கோவை தொடர்ந்து டாப்!
தளர்வு என்பது நமது குறைந்தபட்ச வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுதானே தவிர , இயல்பு நிலை திரும்பி விட்டதாக அர்த்தம் கிடையாது.
இன்னும் ஓயாத அலை
தமிழகத்தைப் பொறுத்தவரை இன்னும் 2வது அலை முடிவுக்கு வரவில்லை. 2வது அலையின் மத்தியில்தான் நாம் இருக்கிறோம். இன்னும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான புதிய பாதிப்புகள் வந்து கொண்டுதான் உள்ளன. உயிரிழப்புகள் பெரிதாக குறையவில்லை. ஆபத்து இன்னும் நீ்ங்கவில்லை. தொடர்ந்து பாதிப்புகள் இருந்தபடிதான் உள்ளன. அதில் எந்தக் குறைவும் இல்லை என்பதை யாரும் மறக்கக் கூடாது.
புதிய தொற்றில் சரிவு
புதிய தொற்றுக்கள் சரிவு நிலையில் இருப்பதை கணக்கில் கொண்டே அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதை இயல்பு நிலை திரும்பி விட்டதாக மக்கள் கருதினால் நம்மை விட பெரிய முட்டாள்கள் உலகத்திலேயே இருக் முடியாது. அரசு தனது கடமையைச் செய்கிறது. ஆனால் மக்கள்தான் எப்போதும் போல கவனமாக இருக்க வேண்டும். நமது பாதுகாப்பும், நமது உயிரும் நமது கையில் என்பதை மக்கள் மறந்து விடவே கூடாது.
தேவையில்லாமல் சுத்தாதீங்க
தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். கடைகளுக்குப் போக வேண்டுமானால் அருகில் உள்ள கடைகளுக்குப் போங்க. தேவையானதை மொத்தமாக வாங்கி வந்து விடுங்க..கடைதான் வழக்கம் போல திறந்துட்டாங்களே என்று நினைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப வெளியில் போவதை தவிர்க்க வேண்டியது மிக மிக முக்கியம். எங்காவது கூட்டம் இருந்தால் அந்த இடத்தைத் தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி கடைக்குப் போகாதீங்க
கடைகள் திறந்திருக்கிறதே என்று அடிக்கடி கடைக்குப் போவதும், வாகனத்தை எடுத்துக் கொண்டு டர்புர்ரென்று ரவுண்டு அடிப்பதும் மிகப் பெரிய தவறு.. அந்தத் தவறை மட்டும் செய்து விடாதீங்க. கட்டுப்பாட்டோடு இருங்க. அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில்தான். அதை புரிந்து கொண்டு மக்களும் தங்களால் முடிந்தவரை கட்டுப்பாடு காக்க வேண்டும். கூடுமானவரை தடுப்பூசி போடும் வயதில் இருப்போர் தவறாமல் அதைப் போட முயற்சிக்கவும். காரணம் 3வது அலை எப்படி இருக்கும் என்று தெரியாது.
இயல்பு நிலை திரும்பலை
வழக்கம் போல எல்லாம் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு மட்டும் வந்து விடாதீங்க. கொரோனா முற்றாக ஒழியும் வரை நாம் பல்வேறு சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அரசு லாக்டவுன் போட்டால்தான் நாங்க கட்டுப்படுவோம் என்று இல்லாமல், நாமே சுயமாக எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவது நமக்கு மட்டுமல்ல, நமது குடும்பத்துக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கும் நல்லது.
மரணங்களை மறக்காதீங்க
கொரோனா முதலாவது அலையை விட 2வது அலையில் மிகப் பெரிய சேதத்தை தமிழ்நாடு சந்தித்து விட்டது. எங்கு திரும்பினாலும் பிணம் என்ற அவல நிலையையும் பார்த்து விட்டோம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு துயரம் என்ற சோகத்தையும் பார்த்து விட்டோம். ஆக்சிஜன் கிடைக்காமல், பெட் கிடைக்காமல், மருத்துவமனை கிடைக்காமல் அலைந்த துயரத்தையும் பார்த்து விட்டோம். அந்த நிலை மீண்டும் திரும்பாமல் இருப்பது அரசின் கையில் இல்லை.. மக்களான நமது கையிலும், கட்டுப்பாட்டிலும்தான் இருக்கிறது. எனவே அடங்கியே இருப்போம்.. கொரோனாவை அடக்கி வெல்வோம்.. அதுவரை, அது நம்மை விட்டுப் போகும் வரை ரொம்ப கவனமா இருங்க.