தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்
சென்னை: தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணி காத்திட, உரிமைகளைப் பாதுகாக்க 1989-ம் ஆண்டு டிசம்பர் 13-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தின்படி சட்டப்பூர்வ அதிகாரம் பெற ஆணையமாகவும் செயல்பட்டு வருகிறது.

தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1989, 1991 சட்டசபை தேர்தல்களில் தென்காசி தொகுதியில் இருந்தும் 2006-ம் ஆண்டு கடையநல்லூர் தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பீட்டர் அல்போன்ஸ். ராஜ்யசபா எம்.பி.யாகவும் அவர் பதவி வகித்தார்
தற்போதைய திமுக அரசில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினர் நல ஆணைய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு ஆணையங்கள், வாரிய தலைவர்கள் பதவிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி- பீட்டர் அல்போன்ஸ்
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பீட்டர் அல்போன்ஸ் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக என்னை நியமித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு எனது நெஞசார்ந்த நன்றி. அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு தகுதி உள்ளவனாக இருப்பேன்!
இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications