சபாஷ் சரியான முடிவு! ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு! தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா பாராட்டு!
சென்னை: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது என மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்யக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறியிருப்பதாவது;
''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டு அரசு நிர்வாகத்தை செயலிழக்கச் செய்யும் ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.''
''கடந்த ஆகஸ்ட் 24 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 49 வாழ்நாள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பிய கோப்பிற்கு இரண்டு மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் கையொப்பமிடவில்லை. இந்தப் போக்கை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த அக்டோபர் 28 சென்னையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்ட போராட்டம் நடைபெற்றது. ''
''இந்த நிலையில் வாழ்நாள் சிறைவாசிகள் முன்விடுதலை பரிந்துரை உள்ளிட்ட சட்டமன்றம் நிறைவேற்றிய பல சட்டமுன்வடிவுகள்,அரசின் நியமன உத்தரவுகள் ஆகியவற்றுக்கு ஓப்புதல் வழங்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகத்தை ஆளுநர் முடக்கி வருவதாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளன் முன்விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்து அளித்த தீர்ப்பும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பானதாகும்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications