“பெருமையா பேசி 24 மணி நேரம் தாண்டல.. அதுக்குள்ள இப்படி” போலீசுக்கே இந்த நிலைமைன்னா - தினகரன் பொளேர்!
சென்னை: போலீசார் மீதே இப்படி தாக்குதல் நடந்தால், பொதுமக்களின் நிலை என்ன ஆகும் என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
தி.மு.க ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக முதலமைச்சர் பெருமையாக பேசி 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என டிடிவி.தினகரன் சாடியுள்ளார்.
உசிலம்பட்டியில் களம் இறங்குகிறாரா டி.டி.வி.தினகரன்... விறு விறு தேர்தல் பணிகள்..!
கொள்ளை சம்பவம்
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ளது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். இது தற்போது செயல்படாத நிலையில் உள்ளது. தானே புயலால் பாதிக்கப்பட்ட இந்த நிலையத்தின் இரும்பு உள்ளிட்ட தளவாட பொருட்கள் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன.
அங்கு உள்ள இரும்பு பொருட்களை கொள்ளையடிக்க அடிக்கடி கொள்ளையர்கள் புகுந்து வருகின்றனர். இன்று அதிகாலையும் கொள்ளை சம்பவம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பெட்ரோல் குண்டு
அப்போது சுமார் 50 கொள்ளையர்கள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கும்பல் கடந்த சில நாட்களாக ஆலைக்குள் புகுந்து இரும்பு பொருட்களை திருடி உள்ளதாக கூறப்படுகிறது.
போலீசார் மீதே
இந்நிலையில், போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது, போலீஸார் மீதே இப்படி தாக்குதல் நடந்தால் பொதுமக்களின் நிலை என்ன ஆகும்? என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி.தினகரன், "கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் காவல்துறையினர் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
24 மணி நேரத்திற்குள்
மேலும், தி.மு.க ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது முதலமைச்சர் பெருமையாக பேசி 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இதுதான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்குச் சாட்சி. காவல்துறையினர் மீதே இப்படி தாக்குதல் நடந்தால், பொதுமக்களின் நிலை என்ன ஆகும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.