பிஎஃப் பணம் பெறுவோருக்கு சூப்பர் சான்ஸ்.. வருங்கால வைப்பு நிதி திட்ட பிரச்சனையில் ஒரே நாளில் தீர்வு
சென்னை: பிஎஃப் உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோரின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே "நிதி உங்கள் அருகில்" என்ற பெயரில் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இந்த முகாம்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், சந்தாதாரர்கள் உள்ளிட்டோர் தங்களது பிரச்சனைகளை களைந்து கொள்ள முடியும்.. அந்தவகையில், வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் முகாம், தற்போது 6 மாவட்டங்களில் நடக்க போகிறது.. இதுகுறித்த விவரங்கள்தான் வெளியாகியிருக்கின்றன.
"நிதி உங்கள் அருகில்" என்ற குறை தீர்ப்பு முகாம் அனைத்து இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது.. அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதமும், சென்னையில் பிஎஃப் சிறப்பு முகாம் நடைபெற்றது.

சென்னை மட்டுமல்லாமல், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், புதுச்சேரி, திருப்பத்தூர் மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்கள் புகார்களையும், கோரிக்கைகளையும் கூறியிருந்தனர்.. அந்த மனுக்களின் தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மீண்டும் நடக்கும் முகாம்
அந்தவகையில், மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் "நிதி உங்கள் அருகில்" மற்றும் இ.எஸ்.ஐ.சி சுவிதா சமகம் இணைந்து மீண்டும் முகாம் நடத்துகின்றன.. வரும் ஆகஸ்ட் 28ம் தேதியன்று காலை 9.00 மணிக்கு இந்த குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன.
பிஎஃப் உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வேலை பார்க்கும் நிறுவனங்களிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்வது, ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது, இ-நாமினேஷன் தாக்கல் செய்வது மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட சேவைகள் இந்த முகாம்களில் வழங்கப்பட உள்ளன.
என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு
எனவே, வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்குப் பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சனைகளுக்கும், இஎஸ்ஐசி பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
இந்த முகாமில் பங்கேற்போர் தங்கள் குறைகளுக்கு தீர்வு காண t.ly/nPTt என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்த பின்னர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம்.
6 மாவட்டங்களில் முகாம்
மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் தேனி விருதுநகர் திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தில் முகாம் நடைபெற உள்ளது.
இதில் மதுரையில் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி,1/132, நகரி முதல் சோழவந்தான் சாலை, ராயபுரம், சோழவந்தான், மதுரை - 625234 என்ற இடத்தில் முகாம் நடக்கிறது.
சிவகங்கையில், ஃபெமினா மஹால், சத்ய மூர்த்தி தெரு, அரண்மனை வாசல், சிவகங்கை- 630561, என்ற இடத்தில் முகாம் நடக்கிறது.
ராமநாதபுரத்தில் இன்ஃபேண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, 8ஏ/10, சொக்கலிங்கபுரம் தெரு, ராமநாதபுரம் -623501, என்ற இடத்தில் முகாம் நடக்கிறது.
தேனியில் கூட்ட அரங்கு, கண்ணம்மா மெஸ், கம்பம் மெயின் ரோடு, தேனி-625531, என்ற இடத்தில் முகாம் நடக்கிறது.
விருதுநகரில், ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, சடையம்பட்டி, சாத்தூர், விருதுநகர்-626203, என்ற இடத்தில் முகாம் நடக்கிறது.
திண்டுக்கல்லில் அக்ஷயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சீலைப்பாடி, திண்டுக்கல், என்ற இடத்தில் முகாம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications