அதிமுக- பாஜக கூட்டணியில் உள்ளே வரும் புதிய கட்சி.. பியூஷ் கோயல் இன்று நடத்தும் முக்கியமான மீட்டிங்
சென்னை: பாஜக தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகிறார். கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கையில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பியூஷ் கோயலின் தமிழக வருகை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தேமுதிக தலைவர்களை பியூஷ் கோயல் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் அனைத்துக் கட்சிகளும் இறங்கியுள்ளன. திமுகவை பொறுத்தவரை அக்கூட்டணி நிலையாகவே இருக்கிறது. காங்கிரஸில் சில தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் பெரும்பாலும் சிக்கலின்றி இருக்கிறது.

மறுபுறம் அதிமுகவைப் பொறுத்தவரை கடந்தாண்டே அதிமுக- பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு இந்தக் கூட்டணியில் அன்புமணியின் பாமகவும் இணைந்த நிலையில், ஐஜேகே கட்சியும் இந்தக் கூட்டணியில் சமீபத்தில் தான் இணைந்தது. இன்னும் சில கட்சிகளைக் கூட்டணிக்குள் அழைத்து வந்து, கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் அதிமுக- பாஜக கூட்டணி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாகவே இன்று பாஜக தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகிறார். அதிமுகவுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளை, பியூஷ் கோயல் கவனிப்பார் எனத் தெரிகிறது. தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை சுமார் 40 முதல் 45 தொகுதிகள் வரை பாஜக கேட்பதாகத் தெரிகிறது. அதில் பாஜக 20 முதல் 25 தொகுதிகளில் போட்டியிடும். இதர கட்சிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்க பாஜக கேட்பதாகச் சொல்லப்படுகிறது.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டம் வரும் 23ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மேடை ஏற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.
இன்றைய தினம் பியூஷ் கோயல் தேமுதிக தலைவர்களைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தேமுதிக இதுவரை தங்கள் கூட்டணி நிலைப்பாட்டைப் பொதுவெளியில் அறிவிக்காத நிலையில், அவர்கள் பாஜக- அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இதற்காகவே பியூஷ் கோயல் அக்கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட அதிமுக கூட்டணியில் மிக விரைவில் ஒரு புதிய கட்சி இணையப் போவதாகச் சொல்லி இருந்தார். அது தேமுதிகவாக இருக்கலாம் என அப்போதே சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. பியூஷ் கோயலின் தமிழகம் வருகை நிச்சயம் தமிழக அரசியலில் முக்கியமானதாகவே இருக்கும்!












Click it and Unblock the Notifications