விஜய் சுற்று பயணத்தின் போது 'அழுகிய முட்டைகளை' வீச சதி திட்டம்? ரஜினி ரசிகர்கள் மீது பாயும் தவெக
சென்னை: தமிழ்நாடு முழுதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது அவர் மீது அனைத்து இடங்களிலும் அழுகிய முட்டைகளை வீச வேண்டும்; இதற்காக நாமக்கல்லில் இருந்து மொத்தமாக அழுகிய முட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று ட்விட்டர் ஸ்பேஸில் சதித் திட்டம் தீட்டிய ரஜினிகாந்த் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெகவினர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய் இடையேயான திரையுலக அக்கப்போர் நீண்டகாலமாக நீடித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கான அக்கப்போரில் ரஜினிகாந்த் ஒரு கதை சொல்ல அதற்கு விஜய் பதிலடியாக ஒரு குட்டிக் கதை சொல்ல ஒரே களேபரமாகித்தான் இருந்து வந்தது.

தற்போது விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டர். தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் முதல் நடிகர் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்களின் உரையாடல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டர் ஸ்பேஸில் நடைபெற்ற ரஜினிகாந்த் ரசிகர்களின் கலந்துரையாடலில் பேசும் நபர் ஒருவர், விஜய்யை ஒருமையில் விமர்சித்துவிட்டு, மளிகை கடையில் ஒரு முட்டை ரூ.6.50க்கு விற்பனையாகிறது; நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஒரு அக்கவுண்ட் தொடங்குவோம்; நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலைக்கே முட்டைகளை வாங்குவோம்; அதுவும் அழுகிய முட்டை எனில் ரூ.1.50தான் வரும். விஜய் சுற்று பயணம் வரும் போது சரமாரியாக வீசுவோம்.. என்றெல்லாம் கூறுவதாக அதில் இடம் பெற்றிருக்கிறது.
அதாவது நடிகர் விஜய் அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது அவர் மீது அழுகிய முட்டைகளை வீச வேண்டும் என்பதற்கான சதி ஆலோசனைதான் இது; ஆகையால் விஜய் மீது முட்டைகளை வீச சதித் திட்டம் தீட்டிய ரஜினிகாந்த் ரசிகர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தினர், சமூக வலைதளங்களில் இந்த உரையாடல் ஆடியோவை பகிர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications