பிளஸ் 2 வினாத்தாள் லீக்... சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன் பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
12ம் வகுப்புக்கான 2வது திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தேர்வுத்துறை அதிகாரிகள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமைச்சர் அறிவுறுத்தல்
திருப்புதல் தேர்வில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் பொதுத்தேர்வை எந்தவிதமான சச்சரவுக்கு இடம் தராமல் பாதுகாப்புடன், உரிய வழிமுறைகளை பின்பற்றி நடத்த அமைச்சர் அறிவுறுத்தினார்.

சட்டரீதியான நடவடிக்கை
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், '12ம் வகுப்பு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இனி வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வினாத்தாள்களுக்கு பாதுகாப்பு
ஜன்னல் இல்லாத அறைகளில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.வினாத்தாள்கள் வைக்கப்பட்டு இருக்கும் 1,200 அறைகளுக்கும் காவலர்கள் நியமிக்கப்படுவது அவசியம். தேர்வு நேரத்தில் முறைகேடுகளை தடுக்க 3,050 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்படும்.

தேர்வில் காப்பி
தேர்வில் காப்பியடிப்பதை அனுமதிக்க கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். இன்று பிற்பகல் நடக்கும் தேர்வு வினாத்தாள் வெளியானதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தேர்வு நடைபெறும். வெளியான வினாத்தாளில் உள்ள எந்த கேள்வியும் நடைபெறும் தேர்வில் கேட்கப்படாது என்று கூறினார்.

பொதுத்தேர்தலுக்கு உரிய முக்கியத்துவம்
மாநில புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதற்குரிய குழு அமைக்கப்படும். பொதுத்தேர்வை பொறுத்தவரையில் எந்த வித சச்சரவுகளுக்கும் இடமின்றி பொதுத்தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறினார்.

பள்ளிக்கட்டிடங்கள்
தமிழகத்தில் பாழடைந்த பள்ளிக்கட்டிடங்களில் ஏற்கனவே 10 ஆயிரம் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீதம் இருக்கக்கூடிய கட்டிடங்களும் இடிக்கப்படும் அந்த பள்ளி வளாகங்களில் பயின்று வந்த மாணவர்கள் அருகாமையிலுள்ள வாடகை கட்டடங்களில் அவர்கள் கல்வி பயில்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications