பிரதமரின் குசும் திட்டம்.. விவசாயிகளிடம் 420 MW சூரியசக்தி மின்சாரம் வாங்க டெண்டர்! தங்கமான வாய்ப்பு
சென்னை: தமிழக மின் வாரியம், விவசாயிகளிடமிருந்து 420 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை வாங்குவதற்காக புதிய டெண்டரை தற்போது அறிவித்துள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.3.10 வரை வழங்குவோரிடமிருந்தே மின் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
இந்தியாவில் வறட்சி வந்தாலும் சரி, வெள்ளம் வந்தாலும் சரி, வேளாண் சாகுபடியால் மட்டுமே விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் என்ற நிலைமை இனி இல்லை.

சபாஷ் மத்திய அரசு
காரணம், நிலத்தில் பயிர் செய்வதுடன், சூரியனையே பயன்படுத்தி கூடுதல் வருவாயை ஈட்ட ஒரு பொன்னான வாய்ப்பை மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் ஊர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியான் (PM-KUSUM) திட்டம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இந்த அருமையான திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன தெரியுமா? இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து, அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை மாநில மின் வாரியங்களிடம் விற்பனை செய்து, ஆண்டு முழுவதும் ஒரு நிலையான வருவாயைப் பெற வேண்டும் என்பதுதான்,
சூரியசக்தி மின்சாரம்
இப்போது இந்த திட்டத்திற்கு வலு சேர்க்கும்விதமாக, தமிழக\விவசாயிகளிடம் இருந்து சூரியசக்தி மின்சாரத்தை வாங்குவதற்கான முக்கிய டெண்டர் ஒன்றை, தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
மொத்தம் 420 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய இந்தக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. இதில் ஹைலைட் என்னவென்றால், ஒரு யூனிட் மின்சாரத்திற்கான அதிகபட்ச விலையாக ரூ.3.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த விலையிலோ அல்லது அதற்கும் குறைந்த விலையிலோ தங்கள் விலையை சொல்லலாம்.
மின்சார வாரியம் சான்ஸ்
இந்த டெண்டரில் பங்கேற்று, மின்சாரத்தை விற்க தனியொரு விவசாயிக்கு வாய்ப்புள்ளதுடன், விவசாயக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் போன்ற கூட்டு அமைப்புகளும் இதில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது..
சாகுபடியில் கிடைக்கும் வருமானம் ஒருபக்கம் இருந்தாலும், சூரியசக்தி மின்சாரத்தை விற்று ஒரு நிரந்தர மாதாந்திர வருவாயை பெறுவதற்கான சூப்பர் சான்ஸ் தற்போது விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளது.
விவசாயிகளுக்கு பெருத்த நம்பிக்கை
மொத்தத்தில் மின் வாரியத்தின் கோரிக்கையை விசாரித்த ஆணையம், விவசாயிகளிடம் இருந்து வாங்க உள்ள மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு அதிகபட்சமாக, ரூ.3.10 நிர்ணயம் செய்து, டெண்டர் கோர அனுமதி தரப்பட்டுள்ளது மிகுந்த நம்பிக்கையை வேளாண் துறையில் ஏற்படுத்தி வருகிறது.
அத்துடன், விவசாயிகளுக்கு புதிய வருவாய் வாய்ப்பை உருவாக்கும் வகையில், சூரிய மின் உற்பத்தி மாநில மின் துறையில் முக்கிய பங்கு வகிக்கவும் துவங்கியிருக்கிறது.
ஏற்கனவே, தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் (சோலார் பம்பு செட்) திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சோலாரில் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் (40 சதவீதம் தமிழக அரசின் மானியம் மற்றும் 30 சதவீதம் மத்திய அரசின் மானியம்) 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருவது இங்கு நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications