"உலை" வைத்த அமித்ஷா! மோடி சாயம் வெளுத்தது! ஸ்டாலின் பிரதமர் ஆகட்டுமே? கேட்பது யார் பாருங்க? பாஜக "ஆ"
சென்னை: ஜன்னி கண்ட நோயாளிபோல் பிரதமர் பிதற்றுவதா? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார்.. அத்துடன், மு.க.ஸ்டாலின் இந்த நாட்டை ஆண்டால்தான் என்ன தவறு? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த தலைவர் வீரமணி.
திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் அதன் ஏழு கட்டங்களிலும், ஒவ்வொரு கட்டம் முடிந்து இறுதிக் கட்டங்களை நோக்கிடும் நிலையில் அவர்களது "400 கனவு" ஒருபோதும் நனவாகாது.

அவலங்கள்: நாளுக்கு நாள் அவரது 10 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை மக்கள் நன்கு புரிந்துகொண்டு மோடி ஆட்சிக்கு வழியனுப்பு விழா நடத்த வட மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் தயாராகி விட்டனர்.
வாக்குகளையும் 5 கட்டங்களில் பாஜகவிற்கு எதிராக அளித்துள்ளனர். ஜன்னி கண்ட நோயாளிபோல் பிரதமர் பிதற்றுவதா? இந்தத் தோல்வியைத் தெளிவாக பாஜகவும், அதன் பிரதான பரப்புரையாளரான பிரதமர் மோடியும் நன்கு புரிந்துகொண்டதால் நிலைகுலைந்து, ஜன்னி கண்ட நோயாளி பிதற்றுவதுபோல உச்சவரம்பின்றி பொய்ப் பிரச்சாரங்களில், முற்றிலும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக அவதூறு பேச்சினை, வெறுப்புரைகளை நாளும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளனர்.
திருடர்களா: அதன்படியே தமிழ்நாட்டினர் 'திருடர்கள்' என்று நாக்கில் நரம்பின்றி, வாக்கில் நேர்மையின்றி ஒடிசாவில் பேசியுள்ளார் பிரமதர் மோடி. ஒரு பிரதமர் பேசும் பேச்சா? என்று நாகரிக உலகமே நாணித் தலைகுனியும். ஒடிசாவில் பூரி ஜெகன்னாதர் கோயிலில் ஓர் அறை பூட்டியே கிடக்கிறதாம், சாவி இல்லாமல் அச்சாவி தமிழ்நாட்டிற்குக் கொண்டு போகப்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓர் அபத்தமான, அபாண்ட குற்றச்சாட்டினை தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். எத்தகைய கீழ்த்தரமான, ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் இது.
தமிழ்நாட்டிற்கு ஒன்பது முறை வந்து பிரச்சாரம் செய்தபோது தமிழ்மொழி, தமிழர்கள் பற்றியெல்லாம் உச்சிமேல் மெச்சி பேசிய பிரதமர் மோடி. இப்போது இப்படி ஒரு கேலிக் கூத்தான குற்றச்சாட்டைக் கூறுவது அவரிடம் ஆக்கப்பூர்வ திட்டங்கள் குறித்து பேச ஏதுமில்லை. 'மோடி கீ கியாரண்டி' சாயம் வெளுத்துவிட்டது. எனவே, இப்படி நாலாந்தரப் பேச்சாளர் நிலைக்கு ஒரு பிரதமர் இறங்கிவிட்டார்.
கண்டனங்கள்: நமது திராவிட மாடல் ஆட்சி நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்குரிய சரியான கண்டனத்தை 'சுரீர்' என்று தைக்கும்படி ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கண்டனக் கணைகளை பல லட்சக்கணக்கில் அனைத்து மானமுள்ள தமிழர்களாலும் அனுப்பி அவருக்குக் குவிய வேண்டும். அவரது சர்வ வல்லமை படைத்த உளவுத் துறைமூலம் அவர் கண்டறிந்து, சாவியை மீட்கலாமே! ஏன் அவர் அதனைச் செய்யவில்லை?
மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாமே. அது அவர்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்தால், நாட்டின் பொதுவாழ்வின் நாகரிகம் காற்றில் பறந்துவிடுமே!
அமித்ஷா: தனிநபர் தாக்குதல் என்ற தரங்கெட்ட நடைமுறை நாயகமாகவே பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரைகள் நாளுக்கு நாள் தோல்விப் பயம் பெருகப் பெருக மாறி வருவது இதற்கு முன் இந்திய நாட்டுப் பிரதமர்கள் எவராலும் நடத்தப்படாத ஒன்று.
உள்துறை அமைச்சர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் வகையில், ஒடிசாவை ஒடிசாக்காரன் ஆளவேண்டும். தமிழர்கள் ஆளுவதை அனுமதிக்கலாமா? என்று (அங்குள்ள ஆற்றலாளர் பாண்டியன் அய்.ஏ.எஸ். அவர்களை மனதிற்கொண்டு) பிஜு ஜனதா தளத்தை உடைக்கத் தூண்டும் வகையில், தூபம் போடுவதுபோல் பேசுவதும், அதற்கு விரிவுரை எழுதுவதுபோல் தான் பிரதமர் மோடியின் இந்த அவதூறுப் பேச்சாகும். ஒடிசா கோயில் அறை சாவியை தமிழ்நாட்டவர் திருடிப்போய் விட்டார் என்று சொல்லியிருப்பது நாகரிகமானது தானா?
தேச பக்தர்: ஏன், ஸ்டாலின் பிரதமர் ஆகக் கூடாதா? இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தால், ஸ்டாலின் ஆள வந்துவிடுவார் என்றும், இந்த 24 கேரட் தேச பக்தர் பேசுவது எந்த அடிப்படையில்? அப்படியே, மு.க.ஸ்டாலின் ஆண்டால்தான் என்ன தவறு? அவரது ஆட்சியின் திட்டங்கள், மற்ற இந்திய மாநிலங்கள் மட்டுமல்ல. கனடா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் பின்பற்றி, அத்திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்.
உண்மையான தேச பக்தர்கள் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறி, பெருமிதம் அல்லவா அடைவார்கள். தேர்தல் வெற்றி - தோல்வி என்பதைவிட, அறிவு நாணயமும், அரசியல் நனி நாகரிகமும் முக்கியம் என்பதை உணர வேண்டாமா?
தற்காலிகம்: பாஜகவுக்கு மக்கள் நல்ல அளவுதோல்வியைத் தரவேண்டும். முன்னது தற்காலிகம், பின்னது நிரந்தரமானது என்பதை அவர்களுக்கு வாக்காளர்கள் நல்ல தோல்வியைத் தந்து, தக்க பாடம் புகட்ட வேண்டும். அப்போதுதான், ஜனநாயகம் இழந்து வரும் பொலிவை, மீட்டெடுக்க முடியும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கெடு: கிட்டத்தட்ட இதே போன்ற கண்டனத்தையும் தமிழக காங்கிரஸ் விடுத்துள்ளது.. தமிழர்கள் திருடர்கள் என்று மோடி பேசியிருக்கிறார்.. தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசியிருக்கிறார். எனவே, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி , இருவருமே இன்னும் ஒரு வாரத்துக்குள் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், தமிழக பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications