அடுத்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியா? பிரதமர் மோடி இப்படி பதில் சொல்லிவிட்டாரே!
சென்னை: தம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் எந்த ஒரு திட்டமும் இல்லை; பாஜக மேலிடம் எங்கு போட்டியிட சொன்னாலும் போட்டியிடுவேன் என தமிழ்நாட்டில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டின் தந்தி டிவி சேனலுக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார். இந்தப் பேட்டியில் தமிழ்நாட்டில் போட்டியிடுவீர்களா? என்பது குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

தமிழ்நாட்டில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பிரதமர் மோடி அளித்த பதில்: என்னுடைய வாழ்க்கையில் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றி நினைத்ததே இல்லை. திடீரென தேர்தலில் போட்டியிடும் நிலைமை உருவானது. நான் பாஜக எனும் ஒரு கட்சியின் சிப்பாய். அவ்வளவுதான். பாஜக என்னை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்குதான் போட்டியிட முடியும். பாஜக தேர்தலில் போட்டியிட சொன்னது. போட்டியிட்டேன். ஆகையால் பாஜக கட்சி எங்கு என்னை போட்டியிடச் சொல்கிறதோ அங்குதான் நான் போட்டியிடவும் முடியும்.
என்னுடைய வாழ்க்கைப் பயணம் எந்த ஒரு திட்டத்துடனான பயணங்களைக் கொண்டதும் அல்ல. நான் வெளிப்படையாக, திறந்த மனதுடன் பயணிக்கிறேன். இப்படி இருந்தால்தான் வாழ்க்கை நம்மை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
தமிழ்நாடு என்பது இந்தியாவின் மிகப் பெரிய சக்தி. நீங்கள் ஆட்சியை யாருக்கு கொடுக்கிறீர்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் நாட்டின் பிரகாசமான எதிர்கால நலன் கருதி பாடுபடுகிறேன். தமிழ்நாட்டு மக்கள் யாருக்கு ஓட்டுப் போடுகிறார்கள் என்பது என் பிரச்சனை அல்ல. நான் ஒரு போதும் தமிழ்நாட்டுக்கு அரசியல் திட்டத்துக்கு வருவதும் இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications