ஒண்ணா இருக்க கத்துக்கணும்.. பாமகவில் படபடக்கும் பஞ்சாயத்து! மா.செ. ம.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் இருவரும் சேர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டுமென வலியுறுத்தி பாமக மாவட்ட செயலாளரான ஸ்டாலின் இன்று உண்ணாவிரத போராட்டம் இருப்பதாக அறிவித்துள்ளார். ராமதாஸ் ஸ்டாலினை அழைத்து கண்டித்ததாகச் சொல்லப்படும் நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
நாளுக்கு நாள் பாமகவில் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள் வலுத்துக் கொண்டே போகிறது. தந்தை மகன் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது கட்சி இரண்டாக உடைபட்டது போல வந்து நிற்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை தலைவர் ஆக்கினார் ராமதாஸ்.
தொடர்ந்து கட்சியில் நிர்வாகிகள் நியமனம், தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் ஆகியவற்றை அன்புமணியே எடுத்து வந்தார். இந்த நிலையில் கட்சியில் நடந்த சில விவகாரங்கள் ராமதாஸுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பாமக மோதல்
இதை அடுத்து அன்புமணி ராமதாசை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதும் அன்புமணி ராமதாஸ் விழா குழுவுக்கு தலைமை ஏற்று இருந்த வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. ஆனாலும் அதிலும் ராமதாஸ் அன்புமணி ராமதாஸை குறி வைத்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தந்தை மகன் இடையே மோதல் இருப்பது வெட்ட வெளிச்சமான நிலையில் பலரும் அன்புமணி பின்னால் திரண்டனர்.
ராமதாஸ்
ராமதாஸ் நடத்திய கூட்டத்தையே புறக்கணிக்கும் அளவுக்கு நிர்வாகிகளின் செயல்பாடு இருந்தது. இதை அடுத்து கட்சியில் தனது செல்வாக்கு குறைகிறது என நினைத்த ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கட்சியை விட்டு நீக்கியதோடு முன்னாள் நிர்வாகிகளை அந்த பதவிகளில் அமர்த்தினார். இதற்கு இடையே அன்புமணி தற்போது மாவட்ட அளவிலான பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அன்புமணி ராமதாஸ்
அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் மட்டும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் மாநில பொதுக்குழுக்கான முன்னேற்பாடுகளை அன்புமணி செய்வதாக நினைத்து ராமதாஸ் மாவட்ட செயலாளர்களையும் மாவட்ட தலைவர்களையும் நீக்கி வருகிறார். இப்படியாக பாட்டாளி மக்கள் கட்சியில் ஒவ்வொரு நிகழ்வு அரங்கேறிக் கொண்டிருக்க, மூத்த நிர்வாகிகள் தந்தையையும் மகனையும் இணைக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மேலும் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி போன்ற முக்கிய புள்ளிகள் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
பாமக நிர்வாகிகள் ஆதரவு
நான்தான் தலைவர் நான் விருப்பப்படும் போது தான் தலைவர் பதவியை அன்புமணிக்கு தருவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ராமதாஸ். இதனால் கட்சியின் பலம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். ராமதாஸ் வழிநடத்த, அன்புமணி தலைமை ஏற்க வேண்டும் என்பதுதான் அவர்கள் விருப்பம். அதனை பலரும் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பதிவிட்டு வருகின்றனர்.
ம.க. ஸ்டாலின்
அப்படி ஒரு நிர்வாகி தான் ம.க. ஸ்டாலின். தஞ்சை மாவட்ட பாமக செயலாளரான இவர், ஆடுதுறை போரூராட்சி தலைவராகவும் உள்ளார். ராமதாஸ் - அன்புமணி ஆகியோர் மீது மிகுந்த பற்று கொண்டவர். இருவரும் ஒன்று சேர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் ஜூன் 23ஆம் தேதி ஆன இன்று ராமதாஸ் அன்புமணியும் சேர்ந்து பாமகவை வழிநடத்த வேண்டும் எனவும், இதற்காக தைலாபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
பாமக குழப்பம்
இதனை கேள்விப்பட்ட ராமதாஸ் கோபமடைந்து ஸ்டாலினை நேரடியாக தொடர்பு கொண்டு யாரைக் கேட்டு உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தாய்.. என கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ஸ்டாலின் இன்று திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதே நேரத்தில் தற்போதைக்கு கட்சியில் பிரச்சினை இருக்கும் நிலையில் தேவையில்லாமல் பரபரப்பை கிளப்ப வேண்டாம் என சில முன்னாள் நிர்வாகிகள் ஸ்டாலினை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவர் இன்று போராட்டத்தில் ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications