அசைன்மென்டை முடித்த சிவி சண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி! பாமக பஞ்சாயத்துக்கு எண்ட் கார்டு?
சென்னை: பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதல் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு செல்ல அன்புமணி தயாராகி வரும் நிலையில் திமுக பக்கம் தாவலாம் என ராமதாஸ் நினைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ராமதாஸை சந்தித்து பேசிய நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ராமதாஸ் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து தந்தை மகனும் ஒன்று சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவே இல்லாத தொடர்கதை போலத்தான் பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் சென்று கொண்டிருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த சில வாரங்களாக சில நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சியின் வருங்காலத்தைக் கருதி இளைஞர் அணி தலைவராக இருந்த அன்புமணியை ராமதாஸ் தான் தலைவராக்கினார். அதற்குப் பிறகு ஒரு சில ஆண்டுகள் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.

பாமகவில் மோதல்
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகுதான் தந்தை மகன் இடையே மோதல் வெடித்தது. வன்னியர் சங்க மாநாட்டுக்கு முன்பாகத்தான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. அன்புமணியைத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்ததோடு நான் தான் தலைவர் என ராமதாஸ் கூறினார். அவர் பின்னால் ஜிகே மணி, அருள் உள்ளிட்டோர் திரண்டனர். ஆனால் ராமதாஸின் எதிர்பார்ப்புக்கு மாறாக கட்சியின் 95 சதவீத நிர்வாகிகள் அன்புமணி பக்கம் போயினர். அவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ்.
அன்புமணி ராமதாஸ்
இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம், பாமகவின் பொதுக்குழு ஆகியவற்றைத் தொடங்கினார் அன்புமணி. இதை எதிர்த்து ராமதாஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க நடைப்பயணம் மேற்கொண்டு வரும் அன்புமணி முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார். விவசாயிகள், தொழிலாளர்கள், சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம் என அன்புமணியின் பேச்சில் திமுக எதிர்ப்பே பிரதானமாக இருக்கிறது. இதனால் அவர் அதிமுக கூட்டணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமதாஸ்
இடையில் அதிமுகவுடன் அன்புமணி நடத்திய பேச்சுவார்த்தையில் 35 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவைச் சீட்டு தர அதிமுக ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியானது. இது ஒருபுறம் இருக்க, ஒருங்கிணைந்த பாமகவை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் அதிமுக, ஏன் திமுகவில் இருக்கும் தலைவர்கள் கூட முயன்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான சி.வி. சண்முகம் சந்தித்துப் பேசினார்.
சி.வி. சண்முகம்
தனது சகோதரரின் மகன் திருமண விழாவிற்கு அழைப்பு விடுக்கச் சென்றதாகச் சொல்லப்பட்டாலும், அரசியல் குறித்து அவர்கள் சந்திப்பில் பிரதானமாகப் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ராமதாஸ் விருப்பம் தெரிவித்ததாகவும், தைலாபுரம் அல்லது சென்னையின் ஏதாவது ஓர் இடத்தில் சந்திப்பை நடத்தலாம் எனச் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. சந்திப்புக்கு நிச்சயம் ஏற்பாடு செய்கிறேன் என சண்முகம் சொல்லிவிட்டு வந்தாராம்.
பாமக அதிமுக கூட்டணி
கடந்த 2021 தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு சி.வி. சண்முகத்தின் பேச்சுவார்த்தைதான் முக்கியக் காரணம். பின்னரும் ராமதாசுடன் மிகுந்த நெருக்கம் காட்டினார் சண்முகம். மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமையாவிட்டாலும், 2026 தேர்தலில் மீண்டும் ஒருங்கிணைந்த பாமகவை உருவாக்கி அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரும் பொறுப்பை ஏற்று இருக்கிறார் சண்முகம் என்கின்றனர் அதிமுகவினர். அதற்கு தற்போது பலனும் கிடைத்துள்ளது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications