278 நாளாச்சே.. கதறும் மக்கள்! கண்டுகொள்ளாத எண்ணெய் நிறுவனங்கள் - பெட்ரோல் விலையை எப்ப குறைப்பீங்க?
சென்னை: கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.10 கூடுதல் லாபம் கிடைத்தாலும், எண்ணெய் நிறுவனங்கள் சில்லறை விற்பனை விலையை குறைக்காததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உலக சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. ஓராண்டுக்கு முன்பாகவே பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ தாண்டியது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1000 ஐ தாண்டி உள்ளது.
அசுர வளர்ச்சி.. அசாதாரண சொத்து மதிப்பு! காரணம் பிரதமர் மோடியா? முதல்முறையாக மனம் திறந்த கவுதம் அதானி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தின. கடைசியாக கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் அதே நிலையே தொடர்கிறது.
ரூ.110 ஐ தாண்டிய பெட்ரோல் விலை
விலை ஏற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை பல இடங்களில் ரூ.110 ஐ தாண்டியும் சென்றது. டீசல் விலையும் கனிசமாக உயர்ந்ததால் சரக்கு போக்குவரத்துக்கான செலவு அதிகரித்து விலைவாசி உயர்வுக்கும் காரணமாக அமைந்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை அடுத்தடுத்த மாதங்கள் குறையத் தொடங்கியது.
278 நாட்களாக ஒரே விலை
கச்சா எண்ணெய் விலையை பெட்ரோல், டீசல் விலை உயரும்போது உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 278 நாட்கள் எவ்வித மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யாமல் அதே விலையே நீடிக்க செய்துள்ளன.
ராமதாஸ் ட்வீட்
இதுகுறித்து ராமதாஸ் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது, "உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.10 கூடுதல் லாபம் கிடைக்கிறது. ஆனாலும், சில்லறை விற்பனை விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வராதது கண்டிக்கத்தக்கது.
எரிபொருள் விலை
2022 ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு பிறகு கடந்த 278 நாட்களாக, எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடக்கத்தில் சில மாதங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இழப்பு ஏற்பட்டாலும், அதன்பின் பல மாதங்களாக பெட்ரோல் விற்பனையில் லாபம் கொட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.6 லாபம் கிடைத்த நிலையில், பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டின் விலைகளையும் லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
கைவிடப்பட்ட முடிவு
ஆனால், திடீரென அந்த முடிவு கைவிடப்பட்டதன் காரணம் புரியவில்லை. மக்களை வருத்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டக் கூடாது. பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தை மக்களுக்கு வழங்கும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும்." என்று அவர் அவர் பதிவிட்டு உள்ளார்.