இலங்கை கடற்படை அத்துமீறல்களுக்கு... முடிவு கட்டப்பட வேண்டும்... ராமதாஸ் வலியுறுத்தல்..!
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
''வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களின் படகை சிங்களக் கடற்படை கப்பல் மோதி கவிழ்த்துள்ளது. அதில் மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கி விட்டனர்; அவர்களில் ஒருவர் மாயமாகி விட்டார். சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.''
''சிங்களப் படைத் தாக்குதலில் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ராஜ்கிரணை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவியும், சேதமடைந்த படகுக்கு இழப்பீடும் வழங்க அரசு முன்வர வேண்டும்.''
''தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகு கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். சிங்களக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த இலங்கை கடற்படையினர் மீண்டும் தங்கள் அட்டூழியங்களை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்தவாரம் நாகை மாவட்ட மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது.
இந்த நிகழ்வு நடந்து ஒரு வாரத்திற்குள் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை தடுத்து நிறுத்தி நீண்ட காலமாக இருக்கும் மீனவர்கள் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கடந்த வாரம் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்?
தமிழக மீனவர்கள் மீதான சிங்கள கடற்படையின் தாக்குதல் தொடர்வால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இது குறித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தனது பதிவை இணைத்து அனுப்பியிருக்கிறார்.